அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை! மேடையில் கெத்து காட்டிய தனுஷ் பேசியது என்ன?
நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தேசிய விருது சர்ச்சை, அஜித்தின் வசனம் குறித்து பேசினார்.

ராயன் திரைப்படத்திற்கு தேசிய விருது என்பது தமக்கு தானாக அமைந்தது எனவும், தமிழனாக தமக்கு 2 தேசிய விருது கிடைத்துள்ளது எனவும், தட்டி விடாமல் தம்மை தட்டிக் கொடுங்கள் என ராயன் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுந்த சர்ச்சைக்கு நடிகர் தனுஷ் உருக்கமாக பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தேசிய விருது விமர்சனத்திற்கு பதிலடி
அப்போது விழா மேடையில் பேசிய நடிகர் தனுஷ், அண்மையில் ராயன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது எனவும், இந்த படத்தை விட பல படங்கள் தகுதி வாய்ந்தவை உள்ளதாக ரசிகர்கள் அதிருப்தி வெளிப்படுத்தியதை மதிப்பதாக கூறினார். சிறுவனாக இருந்த போது அது ஒரு கனாக்காலம் வெளியானதாகவும் தேசிய விருது கிடைக்கும் எனக் கூறியதால் ஆசையாக இருந்தேன் என்றும், ஆனால் கிடைக்கவில்லை என்றார். புதுப்பேட்டை, 3, மயக்கம் என்ன, மரியான், வடசென்னை, கர்ணன் என பல படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறியும் கிடைக்கவில்லை என்றார். ஒரு சில விஷயங்கள் எவ்வளவு முயன்றாலும் அமையாது, அது தானாக அமையும், ராயன் திரைப்படம் எப்படியோ, ஆனால் எங்களின் உழைப்பு என்பது உண்மையான உழைப்பு என்றார். இந்த முறை அமைந்தது விருது கிடைத்தது எனவும், தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருது கிடைத்துள்ளது, தட்டி விடாமல் என்னை தட்டிக்கொடுங்கள் என்றார். இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது என்று கேட்பவர்கள் யாரும், இவ்வளவு படங்களுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என கேட்கவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.

2019 இல் ஏற்கனவே ரத்த தான முகாம் நடத்தியுள்ளோம் எனவும், இது என்ன திடீரென கூடிய கூட்டமா என்றும், 2002 இல் ஒல்லி குச்சியாக வந்த ஒரு பையனை கை தூக்கி, வழிகாட்டும் தீப்பந்தமாக, யார் என்ன பேசினாலும், 24 வருடமாக என்னுடன் நிற்கும் தூண்கள், எனது குடும்பம் என ரசிகர்களை பார்த்து தெரிவித்தார். நம்ம பசங்க இன்டர்நெட்டில் நெகடிவிடி பரப்புபவர்கள் கிடையாது என்றும், அன்பை கொடுத்தாலும், வெறுப்பை கொடுத்தாலும், அன்பையே திருப்பி கொடுப்போம் என்றார்.
என்ன புண்ணியம் செய்தேன்
சிறிய வயதில் பிறந்தநாள் என்றால் கலர் டிரெசில் வந்து சாக்லட் கொடுப்பார்கள் என்றும், நான் வீட்டில் கேட்டது இல்லை, ஆனால் எனக்கும் ஆசையாக இருந்தது என்றும், ஜூலை 28 எனது பிறந்தநாள் என எனது அக்கா தான் எனக்கு கூறினார் என்றும், எனது அக்கா தாய், தந்தையிடம் பேசி எனக்கு புதிய கலர் ட்ரெஸ் எடுத்து கொடுத்து பின்னர் எனது நண்பர்களுக்கு ஆசை சாக்லேட் வாங்கி கொடுத்தேன் எனவும், இன்று (நேற்று) எனது பிறந்தநாளை நீங்கள் அனைவரும் இவ்வளவு உற்சாகமாக கொண்டாடுகிறீர்கள், நான் என்ன புண்ணியம் செய்துள்ளேன், என்ன கைமாறு செய்ய போகிறேன் எனவும், நன்றி என்பதை தவிர பெரியதாக செய்ய முடியுமா என தெரியவில்லை, மிக்க நன்றி என கூறினார். இவ்வளவு ஆயிரம் பேர் இங்கு கூறி ரத்தம் கொடுத்துள்ளீர்கள், இந்த புண்ணியம் எல்லாம் உங்கள் குடும்பத்தினருக்கு சேர வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன் எனவும், உங்களை நம்பி நான் ரொம்ப பெருமைப்படுகிறேன் என்றும், My rowdi babies, I love you, I am so proud of you என்றார். உங்களுக்கு ஒரு அறிவுரை கூற விரும்புவதாகவும்,வாழ்க்கையில் நிறைய பிரச்சினை வரும், நல்லவன் கெட்டவன் தெரியாது ஏராளமான பிரச்சினைகள் வரும் எனவும்,
மன வலிமை, உடல் ஆரோக்கியம் முக்கியம் எனவும், பத்திய சோறு, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், வாக்கிங் செல்ல வேண்டும், வீட்டு வேலையை செய்தாலே பெரிய பயிற்சி எனவும், வீட்டு உணவை சாப்பிடுங்கள் என்றும், ஜங்க் உணவுகளை உண்ண வேண்டாம் என்றார். நீங்க ஃப்ரியா இருக்க வேண்டும் என குழந்தைகளிடம் மொபைல் கொடுக்க வேண்டாம் என்றும், அவர்களின் மன வளர்ச்சியை பாதிக்கும் என்றும், குழந்தைகளை ஓடி, ஆடி விளையாட வையுங்கள் என்றார்.

தியானம் செய்யுங்கள்
சாமி அறையில் அமர்ந்து 10 நிமிடம் தியானம் செய்யுங்கள் எனவும், சில நாட்களில் எதிர் குரல் பேசி சோர்வடைந்து, அமைதியில் தீபம், திவ்யமாக, அசரீரியாக கேட்கும் குரல் உங்களை நல்வழிப்படுத்தும் எனவும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் என்றும், எண்ணம் போல வாழ்க்கை என அந்த குரல் உங்களிடம் கூறும், அந்த குரல் தான் கடவுள் எனவும், இதை செய்தால் உங்களது வாழ்க்கை மாறும் என்றார். எனது மகன் லிங்கா சிறுவனாக இருந்த போது அவருடன் விளையாடுவேன் எனவும், நான் வெற்றி பெற்றபோது சோர்வடைந்தாலும், எனது மகன் வெற்றி பெறும் வரை போராடுவான் என்றும், ஜெயிக்கும் வரை போராட வேண்டும் என்பதை எனது மகனிடம் இருந்து கற்று கொண்டதாக கூறினார்.
அஜித் வசனம் கொடுத்த உந்துதல்
‘நீயா தோற்று விட்டாய் என ஒப்புக்கொள்ளும் வரையில் உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது’ என்ற அஜித் வசனம் எனக்கு உந்துதல் அளித்தது என்றார். அனைவரும் உங்களது வீட்டின் அருகே உள்ளவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து மேலும் நிறைய நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என்றும், அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும், எனவும், Public nuisance செய்ய கூடாது எனவும், இந்த மாதிரி பசங்க இருக்கணும் என எனக்கு பெயர் வாங்கி கொடுத்து பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றார். தன்னை ஒரு ரூபாய் கூட செலவு செய்ய விடாமல் இடம் கொடுத்து ஏற்பாடும் செலவு செய்த கல்லூரி தலைவர் ஐசரி கணேஷிற்கு நன்றி என்றும் கூறினார். முடிவில் ஓம் நமச்சிவாய, ஜெய்ஹிந்த் எனக் கூறி தனது உரையை தனுஷ் நிறைவு செய்தார்.

இதனிடையே தனுஷ் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்குள் செல்ல முடியாமல் வெளியே இருந்த ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டும், பேனரை கிழித்தும், நிகழ்ச்சி அரங்கிற்குள் சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பேனர் கட்டைகள் மீது ஏறி நின்று ரசிகர்கள் ஆபத்தான முறையில் தனுஷை கண்டு ரசித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















