Actress Urvashi: என்னுடைய குருநாதர்.. நன்றி மறக்காத ஊர்வசி.. பாக்யராஜ் பற்றி நெகிழ்ச்சி பேச்சு..
பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஊர்வசி ஒன்று தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக வலம் வருகிறார்.

திரைக்கதை என வந்து விட்டால் பாக்யராஜை வெல்ல இந்திய அளவில் ஒருவரும் கிடையாது என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் 50 ஆண்டு சினிமா பயணம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை ஊர்வசி பங்கேற்று பேசினார். பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஊர்வசி ஒன்று தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக வலம் வருகிறார். ஆனால் எந்த மேடை ஏறினாலும் தன்னுடைய இந்த நிலைக்கு பாக்யராஜ் தான் காரணம் என்பதை கண்டிப்பாக தெரிவிப்பார்.
இந்த நிலையில் பாக்யராஜ் 50 நிகழ்ச்சியில் பேசிய ஊர்வசி, “நான் இந்த மேடையில் பேச காரணம் என்னுடைய குருநாதர் பாக்யராஜ் தான். ஒவ்வொரு நாளும் நான் மேக்கப் போடும்போதும் அவரை நினைக்காமல் இருந்ததில்லை. அவர் காலில் விழுந்து கும்பிடுவது போல தான் நினைத்துக் கொள்வேன். இந்த 50 ஆண்டு சினிமா பயண விழாவில் நான் அத்தகைய தருணத்தை எதிர்பார்த்து தான் கலந்து கொண்டிருக்கிறேன். 50 வருடங்கள் சினிமாவில் அதே புகழ், மரியாதை, கௌரவத்துடன் ஒருவர் இருப்பது மிகவும் கடினம். ஒரு திரைக்கதை என வந்து விட்டால் பாக்யராஜை வெல்ல இந்திய அளவில் ஒருவரும் கிடையாது. இனியும் யாரும் வர முடியாது.
இன்றைக்கும் அவர் வசனத்தை மாற்றிப் பேச எனக்கு மட்டுமே உரிமை உண்டு. பாக்யராஜின் கதையான தாய்க்குலமே தாய்க்குலமே படத்தை அவர் சிஷ்யரான முருகேஷ் தான் இயக்கினார். நானும், பாண்டியராஜனும் நடித்தோம். இரண்டு மனைவி கதை. கிளைமேக்ஸில் அதை ஏற்றுக்கொண்டு நான் போவது போல கதை அமைக்கப்பட்டிருந்தது.
நான் அதை மறுத்தேன். அதைக் கேள்விப்பட்ட பாக்யராஜ், ஊர்வசி அப்படித்தான் வேண்டுமென்றால் இருக்கட்டும் என சொல்லி விட்டார். அதைக் கேட்டு முருகேஷ் ஷாக்காகி விட்டார். பாக்யராஜின் கதை, அதுவும் கிளைமேக்ஸை மாற்றவே விரும்ப மாட்டார். இப்படி அவரிடம் எனக்கு உரிமை இருக்கிறது.
அதேபோல் முந்தானை முடிச்சு படத்தில் ஒவ்வொரு காட்சியும் ஏன் எடுத்தார்கள் என தெரியாது. பாக்யராஜின் தீர்க்க தரிசனம் தான் நான் இன்றைக்கு இந்த இடத்தில் இருக்க காரணம். பள்ளிக்கூட வாத்தியார் மாதிரி தான் நடந்துக் கொள்வார். ஆனால் அவரிடம் இருந்து தப்பான வார்த்தை ஒன்று கூட வராது. நான் பாக்யராஜூக்கு பயப்பட மாட்டேன்.
ஒவ்வொரு முறையும் பாக்யராஜ் படம், அவரின் நிகழ்ச்சியில் பங்கேற்க காரணம் அப்போது தான் நான் என்னுடைய முதல் படத்தில் நடித்த 14 வயதுக்கு செல்லும் வாய்ப்புக்கு கிடைக்கும். என் குருவை பார்க்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். எல்லோராலும் பாராட்டப்படக்கூடிய மேடை வரை என்னைக் கொண்டு வந்து விட்டீர்கள். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்திருப்பார்.






















