Vadivelu: 250 ரூபாய்க்காக குடைபிடித்த வடிவேலு! யாருக்கு தெரியுமா?
நடிகர் வடிவேலு குடை பிடிப்பதற்காக ரூபாய் 250 சம்பளம் வாங்கியதும், யாருக்காக குடைபிடித்தார் என்பதையும் கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக உலா வந்தவர் நடிகர் வடிவேலு. இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கவுண்டமணி, செந்தில் திரைப்படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்ட பிறகு கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடியனாக உலா வந்தவர்.
வடிவேலுவின் தொடக்க காலம்:
அதேசமயம், வடிவேலுவின் தொடக்க காலம் மிகவும் கடினமானதாகவே இருந்தது. 1988ம் ஆண்டு என் தங்கை கல்யாணி படத்தில் சைக்கிள் ஓட்டி வரும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 1991ம் ஆண்டு நடிகர் ராஜ்கிரண் இயக்கி நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில்தான் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர், ஆத்தா உன் கோயிலிலே, சின்னக்கவுண்டர், இளவரசன், சிங்கார வேலன் ஆகிய படங்களில் கவுண்டமணிக்கு அடுத்தகட்ட நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் வடிவேலுவின் சம்பளம் மிக மிக குறைவான அளவே இருந்தது. சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்திற்கு குடை பிடித்து வரும் கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அந்த கதாபாத்திரத்திற்கு அவருக்கு ரூபாய் 250 சம்பளமாக வழங்கப்பட்டது.
250க்கு குடை பிடித்த வடிவேலு:
இதுதொடர்பாக, விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், நடிகருமான தியாகு ஒரு முறை அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது, வடிவேலு நல்ல பையன். நல்ல காமெடியன். விஜயகாந்திற்கு சின்ன கவுண்டர் படத்துல பின்னாடி குடை பிடிச்சுட்டு போனான். 250 ரூபாய் சம்பளம். கால் அமுக்கிவிடுவான் சாயங்கலாம். அப்புறம் விஜயகாந்த் இருக்குற தெருவுலயே வீடு வாங்கிட்டான். விஜயகாந்த் முன்னாடியே வாங்கிட்டான். விஜயகாந்த் எதிரே வாழனுமாம். போட்டி எல்லாம் இல்லை, பணம் கண்ணை மறைச்சுடுச்சு.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்துடன் மோதல்:
வடிவேலு விஜயகாந்துடன் இணைந்து சின்னக் கவுண்டர், சக்கரைத் தேவன், வல்லரசு, எங்கள் அண்ணா போன்ற படங்களில் நடித்துள்ளார்.வடிவேலு தனது திரை வாழ்வைத் தொடங்கியபோதே நடிகர் விஜயகாந்த் திரையுலகின் உச்சநட்சத்திரமாக கொடி கட்டிப் பறந்தவர். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயகாந்த் - வடிவேலு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், வடிவேலு விஜயகாந்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக திமுக-விற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். ஆனால், அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது.
அதன்பின்பு அவருக்கு பட வாய்ப்புகளும் முற்றிலும் குறைந்துவிட்டது. வருடத்திற்கு சுமார் 15, 20 படங்கள் நடித்து வந்த வடிவேலு வருடத்திற்கு ஒரு படம் என்ற நிலைக்கு மாறினார். 2009ம் ஆண்டு 7 படங்கள் நடித்த வடிவேலு 2012ம் ஆண்டு ஒரே ஒரு படம்தான் நடித்திருந்தார். அதன்பின்பு, 2017ம் ஆண்டுக்கு பிறகு நடிக்காமலே இருந்த வடிவேலு 2022ம் ஆண்டு மீண்டும் நடித்தார்.
மாமன்னன் படத்தில் அவர் வித்தியாசமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கவும் அவருக்கு தற்போது தொடர்ச்சியாக குணச்சித்திர கதாபாத்திரங்கள் வருகிறது. மாரீசன் எனும் படத்தில் பகத் ஃபாசிலுடன் இணைந்து கடைசியாக நடித்தார்.





















