கமலை சந்திக்க வைத்த சிவகார்த்திகேயன்..மேடையில் கலங்கிய நடிகர் சிங்கம் புலி
தாய்கிழவி படத்தைப் பார்த்த பின் கமலை முதல்முறையாக நேரில் சந்தித்தது குறித்து நடிகர் சிங்கம் புலி தாய்கிழவி வெற்றிவிழாவில் பேசினார்

தாய்கிழவி படத்தில் கமல் ரசிகர்கராக நடித்த சிங்கம் புலி ரசிகர்களிடம் பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். தாய்கிழவி படத்தைப் பார்த்தபின் நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து பேசிய அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரச்த்குமார் நடித்துள்ள படம் தாய்கிழவி. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியான இந்த படம் 10 நாட்களில் 50 கோடி வசூல் செய்துள்ளது. நேற்று சென்னையில் தாய்கிழவி படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சிங்கம் புலி
கமலை சந்தித்தது குறித்து சிங்கம் புலி
இந்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவகுமார் முருகேசன் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை தமிழ்நாட்டில் நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் முக்கியமாக கமல் சாரின் அத்தனை கோடி ரசிகர்களும் என்னை ரசிக்கிறார்கள். மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பின் மகாராஜா படத்திற்கு பின் எனக்கு அதிகமான பாராட்டுக்கள் கிடைத்த படம் தாய்கிழவி. தாய்கிழவி படத்தைப் பற்றி பேச வேண்டும் என்றால் 5 மணி நேரம் பேசலாம். தாய்கிழவி படத்தின் இசை வெளியீட்டில் நான் இதுவரை கமலை பார்த்ததே இல்லை என்று சொல்லியிருந்தேன். இந்த படம் வெளியானபின் கமல் சார் என்னை பார்க்க அழைத்ததாக எனக்கு ஃபோன் வந்தது. நான் கூட யாரோ ஃபேக் கால் செய்து என்னை ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தேன். கமல் சார் ஆபிஸ் சென்று அவரை சந்தித்தேன். ஏன் என்னை இத்தனை நாள் பார்க்கவில்லை என்று கேட்டார். தனது மகள் ஸ்ருதி ஹாசனிடம் என்னை காட்டி சிங்கம் புலி என்னுடைய பி.ஆர் என்று கமல் சொன்னார். அரசியல் வேலைகள் , தயாரிப்பு வேலைகளுக்கு நடுவில் என்னை சந்தித்தற்காக கமலுக்கு நன்றி கூறினேன். 'சிங்கம்புலி எனக்கு சினிமா பிடிக்கும் ' என்று கமல் சொன்னார்.
நான் சினிமாவுக்கு போகப் போகிறேன் என்று சொல்லும்போது எல்லாரும் என்னை எச்சரித்தார்கள். அதற்கு எல்லாம் நான் கலீல் ஜிப்ரானின் கவிதையைதான் பதிலாக சொல்வேன். ஒரு ஆறு மலையை கடந்து அருவியாக விழுந்து பயணித்துக்கொண்டே இருந்தது. கடைசியில் அந்த ஆறு கடலில் கலக்கப் போகிறபோது தான் உப்பாக மாறிவிடுவோம் என்று பயந்துவிட்டது. ஆனால் கடலில் கலந்தபின்னர் இப்போது நான் ஆறு இல்லை கடல் என்று பெருமையாக சொல்லிக்கொண்டது. அதேபோல் இப்போது நான் ஆறு இல்லை கடல். தாய்கிழவி படத்தின் மூலமாக உலகம் முழுவதும் சென்றிருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் மற்றும் சிவகுமார் முருகேசன் அவர்களுக்கு நன்றி " என்று சிங்கம் புலி பேசினார்.























