அரசியலில் திருப்பம்... ரஜினிகாந்த் சொன்ன ரகசியம்! 2027ல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: வைரமுத்துவின் பரபரப்பு தகவல்
நடிகர் ரஜினிகாந்த் கவிஞர் வைரமுத்துவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து சுவாரஸ்யமாக பதிவிட்டுள்ளார்.

வடநாட்டு அரசியலில் திருப்பப் ஏற்படப்போவதாகவும் ரஜினிகாந்த் தன்னிடம் கூறியதாக தெரிவித்த வைரமுத்து, 2027 இல் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து சினிமா தொழிலையும் தாண்டி, இருவரும் நண்பர்களாவும் பேசிக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இவர்கள், சினிமாவை தாண்டி அரசியல், நாட்டு நடப்பு, இலக்கியம் போன்றவற்றை பற்றியும் உரையாடுவது வழக்கம். அந்த வகையில், வைரமுத்துவை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அப்போது, இருவருக்குள்ளும் நிகழ்ந்த உரையாடல் பற்றி வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று எனது இல்லத்திற்கு வருகை தந்தார்.‘பாசமுள்ள மனிதனப்பா - நான் மீசவச்ச குழந்தையப்பா’ என்ற வரிகளுக்கு இப்போதும் அவர்தான் இலக்கியமாக இலங்குகிறார். வியப்புக்குரிய மனிதர்தான். அடித்துக்கொண்டோடும் அரசியல் வெள்ளம், சாய்த்துவிட்டோடும். சமூகப் புயல் இரண்டையும் அரைநூற்றாண்டாய்க் கடந்து தன்னிடத்தை ஒருவர் தக்கவைத்துக் கொள்வது ஜாதகத்தால் ஆவதல்ல; சாமர்த்தியத்தால் ஆவது. உணவு முறை உடல் நிலை குறித்து ஊடாடிய எங்கள் உரையாடல் ஊர் சுற்றக் கிளம்பியது. எங்கள் நூறு நிமிட உரையாடலை ‘கிரீன் டீ’ கூடக் கெடுக்கவில்லை.
தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்து விவாதித்தோம். ஒவ்வொரு தரவிலும்,அவருக்குள்ள ஆழமும் தெளிவும் உண்மையும் என் ஆர்வத்தைத் தூண்டின. வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் அவர் சொன்னபொழுது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அவரது கலைப்பயணத்தின் திட்டங்களை விவரித்தார். 2027 ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்; குறித்துக்கொள்ளுங்கள். அவரிடம் முதிர்ச்சி தெரிகிறது; முதுமை தெரியவில்லை ‘இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது’ என் தமிழ் பொய்யாகவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.























