ஒரு படத்தின் வெற்றிக்கு தனி நபர் காரணமா இருக்க முடியாது - நடிகர் நட்டி ஓபன் டாக்!
இப்போதெல்லாம் ஒரு படத்தை உருவாக்குவது எளிதான காரியம் கிடையாது. இப்போதெல்லாம், ஒரு படத்தையும் நன்றாக சந்தைப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் படம் எடுப்பது சாதாரண விஷயமல்ல என நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் நடராஜன் சுப்பிரமணியம். சினிமாவில் நட்டி என அழைக்கப்படும் இவர் தமிழ் சினிமா தொடங்கி இந்தி சினிமா வரை அனைவருக்கும் பரீட்சையமானவர். 1999 ஆம் ஆண்டு லாஸ்ட் ட்ரெயின் டூ மகாகலி என்ற குறும்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தமிழில் விஜய் நடித்த யூத் படம் மூலம் எண்ட்ரீ கொடுத்தார்.
இதன்பின்னர் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். அதேசமயம் நடிகராக நாளை என்ற் படத்தின் மூலம் அறிமுகமானார். முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை, நம்ம வீட்டு பிள்ளை, கர்ணன், இன்ஃபினிட்டி, மகாராஜா, பிரதர், கங்குவா என பல படங்கள் மூலம் நடிகராகவும் பரீட்சையமானார். அடுத்ததாக சூர்யா நடிக்கும் கருப்பு, அதர்வா நடிக்கும் இதயம் முரளி ஆகிய இரு படங்களிலும் முக்கிய வேடத்தில் நட்டி நடித்து வருகிறார்.
இதனிடையே நட்டியிடம், தற்போதைய சூழலில் திரைப்படத்துறை சந்திக்கும் சவால்கள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சினிமா எப்போதும் ஒரு குழு முயற்சியாகும். ஒரு படத்தின் வெற்றிக்கு குறிப்பிட்ட சிலர் மட்டுமே காரணம் என்று யாரும் கூற முடியாது. இப்போதெல்லாம் ஒரு படத்தை உருவாக்குவது எளிதான காரியம் கிடையாது. இப்போதெல்லாம், ஒரு படத்தையும் நன்றாக சந்தைப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதேசமயம் ஒரு படம் நன்றாக இருந்தால் தியேட்டர் காட்சிகள் இயல்பாகவே அதிகரிக்கும். அப்படியான ஒரு படம் தியேட்டருக்கு வந்தவுடன் அது மக்களின் படமாக மாறும். ரசிகர்கள் அதை விரும்பலாம் அல்லது விரும்பாமல் போகலாம். அதுதான் படத்தின் விதி என்று நட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை படத்தில் நடிக்க இருந்த ஒரு நண்பருக்கு நான் சென்னை தமிழ் கற்றுக் கொடுக்க முயற்சித்த நிலையில் நடிப்பு துறைக்குள் வந்தேன். அந்த நண்பரால் ஏற்கனவே கமிட்டான பணிகளால் அதில் நடிக்க முடியாதபோது நான் நடித்தேன். 1980களின் பிற்பகுதிகளிலும், 1990களின் முற்பகுதிகளிலும் நடிகர், நடிகைகள் ஷூட்டிங் வரவில்லை என்றால் அவர்கள் வரும்முன் அந்தந்த கேரக்டரின் உடைகளை அணிந்து கொண்டு கேமராவுக்கு பின்னால் நின்று ஷாட் எடுக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் இயல்பாகவே நடிப்பை வளர்ப்பதற்கான நேரம் கிடைத்தது.
மேலும் தான் ஒளிப்பதிவு செய்து தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஏஐ தொழில்நுட்ப உதவியால் சமீபத்தில் மாற்றி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பேசிய நட்டி, அசல் எப்போதும் அசல் தான். நீங்கள் அசலில் சோகமான முடிவை வைத்து, பின்னர் தொழில்நுட்ப உதவியுடன் மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றினால் மக்கள் அதை ரசிக்காமல் போகலாம் என அவர் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















