படம் வெளியாகாது என்றதும் மிரட்டலுக்கு பணிந்த ரஜினி , சத்யராஜ்..எதற்கும் அசராமல் தில்லாக பேசும் கமல்
கன்னட மொழி குறித்த தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது

மன்னிப்பு கேட்க மறுத்த கமல்
தக் லைஃப் படத்தில் ஆடியோ லாஞ்சில் கன்னட மொழி பற்றிய கமலின் கருத்து கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி என கமல் சொன்னதற்கு கன்னட மொழி சார்ந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கமலின் கருத்து குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம் என கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மறுபக்கம் தன்னுடைய கருத்திற்காக தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என கமல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நான் தவறாக பேசவில்லை - கமல் பேட்டி
இன்று பத்திரிகையாளரை சந்தித்த கமல். " நான் எந்த மொழி குறித்தும் தவறாக பேசவில்லை . அப்படி பேசியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டிருப்பேன். அரசியல் காரணத்திற்காக சிலர் என்மீது வன்மத்தை கொடுக்கிறார்கள். அவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் பதிலும் சொல்ல மாட்டேன். அனைத்து மாநில மக்கள் மீதும் என் அன்பு இருந்துகொண்டே இருக்கும். இது ஜன நாயக நாடு . சட்டத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான்" என கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.
மிரட்டலுக்கு பயந்த ரஜினி , சத்யராஜ்
தமிழ் நடிகர்களின் படங்களை வைத்து அவர்கள் மிரட்டப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக 2008 ஆம் ஆண்டு ஒக்கேனக்கல் பிரச்சனையின் போது நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு கர்நாடகவில் கிளம்பியது. அப்போது வெளியாக இருந்த ரஜினியின் குசேலன் படத்திற்கு கடும் எதிர்ப்பு வந்தது. ரஜினி மன்னிப்பு கேட்டப் பின்பே அந்த படத்தை பிரச்சனையின்றி வெளியிட முடிந்தது. அதேபோல் காவேரி நீர் பிரச்சனை குறித்து நடிகர் சத்யராஜின் கருத்து பாகுபலி படத்தின் ரிலீஸ் போது கொண்டுவரப்பட்டது. பிரச்சனையை தீர்க்க சத்யராஜ் பத்திரிகையாளர் முன் மன்னிப்பு கேட்டார். அந்த வகையில் தற்போது கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் படம் பெங்களூரில் வெளியாகும் என கன்னட மொழிச் சார்ந்த அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருகின்றன. இந்த மிரட்டலுக்கு பயப்படாமல் தனது நிலைப்பாட்டில் கமல் உறுதியாக நிற்கிறார்.






















