T Rajendar: என் தலைவனை சீண்டி பாக்குறீங்களா?.. TR-க்காக சண்டைக்கு சென்ற கூல் சுரேஷ்.. கலவரமான தியேட்டர்!
காதலர் தினத்துக்கு உயிருள்ள வரை உஷா படம் பிளான் பண்ணிய பிறகு தான் இன்றைக்கு படம் ரிலீஸ் செய்தவர்களுக்கு எல்லாம் காதலர் தினம் நியாபகம் வருமா? என டி.ராஜேந்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உயிருள்ள வரை உஷா படம் ரீ-ரிலீஸ் செய்வதற்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
காதலர் தினத்தை முன்னிட்டு டி.ராஜேந்தர் இயக்கி நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற உயிருள்ள வரை உஷா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்களுடன் காண சென்னை கமலா தியேட்டருக்கு டி.ராஜேந்தர் வருகை தந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “உயிருள்ள வரை உஷா படம் ரீ-ரிலீஸ் செய்வதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒன் மேன் ஆர்மி. 38 நாட்கள் கஷ்டப்பட்டு இந்த படத்திற்காக டிஜிட்டல் வேலைகளை மேற்கொண்டேன். ஒவ்வொரு காட்சியிலும் மீண்டும் வேலை செய்தேன். என்னிடம் நிறைய படம் உள்ளது. நான் இயக்கிய பல படங்களை ரீ-ரிலீஸ் செய்ய சொல்கிறார்கள். உண்மையான காதல் இன்றைக்கு கஷ்டம். ஆனால் உயிரோட்டமான காதல் என்றைக்கும் ஜெயிக்கும். குவாலிட்டியில் எந்த குறைபாடும் இல்லாமல் தான் ரீ-ரிலீஸ் கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.
இளம் தலைமுறையினரை நான் உயிருள்ளவரை உஷா படம் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் இந்த தலைமுறையினர் வாழ்க்கையில் உஷாராக இருக்க வேண்டும். நான் பிப்ரவரி 13ம் தேதி இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம் என நினைக்கும்போது அதேநாளில் நிறைய படம் வரும் என நான் நினைத்தேன்.
திடீரென இத்தனைப் படம் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு என்ன காரணம் என எனக்கு தெரியும். என்னுடைய மகன் சிலம்பரசனின் படம் வெளியாகும்போது என்னுடைய படத்தை நான் வெளியிட மாட்டேன். அது என் கண்ணை நானே குத்துவதற்கு சமம். மேலும் நான் உயிருள்ளவரை உஷா படம் வெளியிடும்போது என்னை நோக்கி இவ்வளவு அம்பு வருகிறதென்றால் என்னுடைய வெயிட் இன்றைக்கு தான் தெரிந்தது.
நான் யாருன்னு இனிமேல் தான் காட்டுவேன். மக்களின் கருத்துகளை நான் இருந்த இடத்தில் இருந்தே கேட்டு வருகிறேன். உயிருள்ள வரை உஷா தமிழ்நாட்டில் ஓராண்டு ஓடியது. தெலுங்கில் 2 ஆண்டுகள் ஓடியது. அப்படிப்பட்ட வரலாறு ஏதாவது உண்டா சொல்லுங்கள். ஒரு பழைய படத்தை எடுத்து அதன் ஆன்மா கெட்டு விடாமல் நவீன யுகத்துக்கு ஏற்ப மாற்றியது எப்படி என்பது பற்றி தான் பேச வேண்டும்.
திரையுலகில் இவ்வளவு பெரிய அரசியல் நடக்கிறதா?. நானே இப்படி அல்லல்படுகிறேன் என்றால் மற்றவர்கள் நிலையை யோசித்துப் பாருங்கள். இந்த படம் ரீ-ரிலீஸில் இப்படி ஒரு எதிர்ப்பை பார்த்து விட்டேன். இந்த காலத்து காதல் எப்படி இருக்குன்னு ஒரு புதுப்படம் எடுக்க இருக்கிறேன். என்னை தூண்டிவிட்டார்கள்.
நான் காதலர் தினத்துக்கு உயிருள்ள வரை உஷா படம் பிளான் பண்ணிய பிறகு தான் இன்றைக்கு படம் ரிலீஸ் செய்தவர்களுக்கு எல்லாம் காதலர் தினம் நியாபகம் வருமா?. நான் கடவுளை நம்புகிறேன். இந்த படத்தின் ரிசல்டை பார்த்து விட்டு தான் இன்றைய இளம் தலைமுறையினருக்கு என்ன பிடிக்கிறது என்பது தெரிந்தால் தான் என்னுடைய மற்ற படங்களை ரீ-ரிலீஸ் பண்ணலாமா என்பதை முடிவெடுக்க முடியும்” என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த நடிகர் கூல் சுரேஷ், “என் தலைவனை சீண்டி பாக்குறீங்களா?” என ஆவேசமாக கேட்க அவரை டி.ராஜேந்தர் சமாதானம் செய்தார். இதனால் அந்த இடம் மிகப்பெரிய அளவில் பரபரப்பானது.























