TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?
சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையை மிகவும் தீவிரப்படுத்தி வருகின்றனர். வரும் 21ம் தேதி மாலை வரை மட்டுமே பரப்புரை செய்ய இறுதி அனுமதி என்பதால் ஒவ்வொரு கட்சியினரும் மிகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் இன்று விஜய் பரப்புரை:
இந்த தேர்தலில் அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் கட்சி தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டில் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் முதன்முறையாக தேர்தல் களத்தில் களமிறங்கியிருப்பதால் இந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விஜய் தனது பரப்புரையை மிகவும் தீவிரப்படுத்தி வருகிறார். நேற்று திருப்பூரில் தனது பரப்புரையை மேற்கொண்ட விஜய் இன்று சென்னையில் பரப்புரை மேற்கொள்கிறார். தவெக-வின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாக தி.நகரில் மாலை 4 மணிக்கு பரப்புரை மேற்கொள்கிறார்.
பின்னர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும், எழும்பூர் தொகுதியிலும் விஜய் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தவெக சார்பில் செல்வம் போட்டியிடுகிறார். எழும்பூர் தொகுதியில் விசில் சின்னத்தில் ராஜ்மோகன் போட்டியிடுகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
சென்னையில் பெரம்பூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரப்புரையில் ஈடுபட்ட விஜய் சில காரணங்களால் வில்லிவாக்கம் பரப்புரையை ரத்து செய்தார். தற்போது மீண்டும் சென்னையில் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் விஜய் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட உள்ளார். மேலும், நாளை மறுநாள் தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியாக உள்ளது.
விஜய் இன்று சென்னையில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசல் ஏற்படாத வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் பல்வேறு மாற்றங்களை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
திமுக கோட்டையாக மீண்டும் மாறுமா சென்னை?
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை திமுக-வின் கோட்டையாக திகழ்வதால் இங்கு விஜய்யின் செல்வாக்கு எடுபடுமா? என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது. குறிப்பாக, விஜய்யே பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதால் இந்த முறை சென்னை மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்



















