Anbumani Ramadoss: பாமக ஒரு நெருப்பு.. நேரடியாக தொடக்கூட முடியாது.. அன்புமணி ஆவேசம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பாமகவை நேரடியாக எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் துரோகிகளை வைத்து சூழ்ச்சி செய்து நம்முடைய குடும்பத்தை பிரித்து விட்டார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக ஒரு நெருப்பு. அக்கட்சியை யாரும் நேரடியாக தொட முடியாது என பென்னாகரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாடி செல்வத்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், “பாமக ஒரு நெருப்பு. அக்கட்சியை யாரும் நேரடியாக தொட முடியாது. இந்த பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெற்றதாக வேண்டும் அதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. அதாவது திமுக கூட்டணியில் போட்டியிடும் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் என்னை பொருத்தவரையில் ஒரு துரோகி. பாமகவில் அடையாளம் கண்டு இன்று பாமகவிற்கு எதிராக போட்டியிடுகின்றார். எல்லோரும் சேர்ந்து அவரை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும்.
உங்களுடன் இருக்கும் துரோகிகளில் முதன்மை துரோகி ஜி.கே. மணி. அவர் எப்படிப்பட்டவர் என்றால் என்னையும் என்னுடைய தந்தையையும் பிரித்து விட்டார். ஆனால் அவரும் அவரது மகன் தமிழ் குமரனும் மட்டும் நன்றாக இருக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பாமகவை நேரடியாக எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் துரோகிகளை வைத்து சூழ்ச்சி செய்து நம்முடைய குடும்பத்தை பிரித்து விட்டார்.
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பாடி செல்வம் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்து, பாப்பாரப்பட்டியில் தேர்தல் பரப்புரை செய்த போது.!#election2026 | #PMK | #NDA pic.twitter.com/6hUu3SJjv9
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 16, 2026
இருந்தாலும் முன்பை விட நாங்கள் இன்னும் கூடுதல் பலமாக இருக்கிறோம். இந்த பென்னாகரம் தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? இங்கு மொத்தமாக அந்த கட்சிக்கு 500 ஓட்டு இருந்திருக்குமா? தமிழ் குமரன் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியில் சேர்வாராம். அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்படுமாம். ஜி.கே. மணி உங்களுக்கு திமுக பிடிக்கும் என்றால் நீங்கள் அங்கு சென்று சேர்ந்திருக்கலாமே?.
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை திமுக செயல்படுத்தாமல் போனதற்கு ஜி.கே. மணி தான் முக்கிய காரணம். அதனைக் கண்டித்து திமுகவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் செய்யலாம் என்று நாங்கள் முயற்சி செய்யும்போது உடனே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போன் செய்து போலியான வாக்குறுதியை ராமதாஸுக்கு பெற்றுக் கொடுத்தார். 2022ல் 25 ஆண்டு காலமாக பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணியிடம் இருந்து அந்த பதவியை நான் பெற்ற நிலையில் என்னைப் பற்றி ராமதாஸிடம் தவறாக சொல்லி வருகிறார். எனவே யாரும் என் அப்பா ராமதாஸை திட்டவோ, குறை சொல்லவோ செய்யாதீர்கள். அவருக்கு 89 வயது ஆகிவிட்டதால் குழந்தை போல மாறி விட்டார்" என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















