எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தது தப்பு தான்.. ஓபனாக பேசிய சசிகலா.. குஷியில் திமுக!
எடப்பாடி பழனிசாமி எனக்கு மூத்தவர் தான். எனினும் அன்பு மனதில் இருந்தால் போதும். காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தன் காலில் விழுந்து ஆசி வாங்கும் புகைப்படத்தை திமுக தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தி வருவது தொடர்பாக அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் சசிகலா தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய சசிகலா, “இத்தனை ஆண்டுகாலம் நான் அரசியலுக்கு வராமல் இப்போது வருவதற்கு தேவை என்னவென்று பார்த்தால், இப்போது மக்கள் பிரச்னை பெரிதாக இருக்கிறது. அவர்களுக்கு திமுக அரசு நல்லது செய்யவில்லை. கடன் சுமையும் அதிகரித்துள்ளது. அதைப் பார்க்கும்போது நான் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தேன்.
நான் அரசியலுக்கு வந்தால் அதிமுக வாக்கு வங்கி பாதிக்கப்படும் என இத்தனை ஆண்டு காலம் பொறுமையாக இருந்தேன். எனினும் இப்போது இருக்கிறவர்கள் அதனைப் புரிந்துக் கொள்வதில்லை. தன்னை தலைமையாக நினைப்பவரும் சரி, இரண்டாம் கட்ட தலைவர்களாக காட்டிக் கொள்பவர்களாவும் சரி இதனை கண்டுக்கொள்ளவில்லை. என் பக்கம் எந்த தவறும் இல்லை. அவர்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை பேசி சரி செய்யவில்லை. 1989ல் அதிமுக இரண்டாக பிரிந்தபோது அந்த இயக்கத்தை நான் தான் சேர்த்தேன். அதேபோல் இப்போதும் சேர்த்து வைக்கலாம் என நினைத்தேன். அதற்காக பொறுமை காத்தேன்.
அந்த அமைதியை அவர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டார்கள். சமீபகாலங்களில் அதனை தெரிந்து கொண்டு தான் அரசியலுக்கு வந்தேன். அப்போதைய அதிமுக தலைவர்கள் இந்த இயக்கத்தில் இருந்தவர்கள், மக்களைப் பற்றி சிந்தித்தார்கள். இப்போது உள்ளவர்கள் அதனை தன் குடும்பத்தின் நலனுக்கான மட்டுமே பார்க்கிறார்கள். அதிமுகவை நம்பி வழிவழியாக பயணப்படுகிறார்கள். அவர்களை மறந்து விட்டார்கள்.
தொண்டர்கள், பொதுமக்கள் மனது வைத்தால் தான் ஒரு தலைவர் உருவாக முடியும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னைச் சுற்றி 10 பேர் இருந்தால் போதும் என நினைக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் யாரும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என நினைப்பார்கள். கட்சி தொண்டர்கள் மீது இருக்கும் நம்பிக்கை தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கும்போது இருந்தது.
சிறையில் நான் வெளியில் வர முடியாத அளவுக்கு நிகழ்வுகள் நடந்தது. ஜெயில் அதிகாரிகளுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்ததால் அது நடந்தது என்பது எனக்கு தெரியும். என்னதான் திமுக வலிமையான கூட்டணியாக இருந்தாலும் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் தென்னந்தோப்பு சின்னத்திற்கு நிச்சயம் வாக்களிப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமி என் காலில் விழுந்து ஆசி வாங்கும் புகைப்படத்தை திமுக தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமி எனக்கு மூத்தவர் தான். எனினும் அன்பு மனதில் இருந்தால் போதும். காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை. நான் அந்த நேரத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அவர் திடீரென தான் என் காலில் விழுந்தார். ஒரு சகோதரனாக நினைத்து தான் தட்டிக்கொடுத்தேன். ஒரு எதிர்க்கட்சி இந்த புகைப்படத்தை காட்டி வாக்கு சேகரிப்பது தான் செஞ்சது தப்புன்னு எடப்பாடி பழனிசாமி உணர்ந்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். சசிகலா பேசியது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியையும், திமுக தரப்புக்கு குஷியையும் கொடுத்திருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்



















