Tamil Nadu Election 2026: தமிழ்நாடு தேர்தல் - 5.73 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 75000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
Tamil Nadu Assembly Election 2026: தமிழ்நாடு தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தொகுதிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள், வாக்குச்சாவடி மையங்கள், பாதுகாப்பு ஏற்பாடு என அனைத்து விவரங்களையும் இங்கே அறியலாம்.

TN Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய 5 கோடியே 73 லட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த சில தசாப்தங்களில் இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முதல்முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்குமா? அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக மாறுமா? முதல்முறையாக தேர்தல் களத்திற்கு வந்துள்ள தவெக தலைவர் விஜய் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார்? யாருடைய வாக்கு வங்கியை சிதைப்பார்? இந்த முறையாவது நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதி சட்டமன்றத்துக்குள் நுழைவாரா? என ஒவ்வொரு தரப்புக்கும் தனித்தனி எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஒவ்வொருவரும் அறிய வேண்டிய முக்கிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 5.73+ கோடி வாக்காளர்கள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் உள்ள 234 தொகுதிகளிலும், இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 5 கோடியே 73 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக பெண் வாக்காளர்கள் 2 கோடியே 93 லட்சத்திற்கும் அதிகமானோரும், ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமானோரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்திவர்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்காளர்களாக உள்ளனர். முதல் முறையாக வாக்களிக்க உள்ள 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாகாளர்கள் மட்டுமே 14 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மட்டுமே 2.54 சதவிகிதம் ஆகும். கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 3 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தான், திமுக ஆளுங்கட்சியாக அரியணை ஏறியது. எனவே, இந்த முறை ஆட்சியை பிடிப்பது யார் என்பதை இறுதி செய்வதில், முதல் தலைமுறையினர் வாக்குகள் பெரும் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 4000+ வேட்பாளர்கள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 85 வேட்பாளர்கள் இருப்பதால், 6 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோக தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் வெறும் 5 பேர் மட்டுமே வேட்பாளர்களாக உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் இருப்பவர்களில் 18 சதவிகிதம் அதாவது 722 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 13லிருந்து 18 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது. இதுபோக 981 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 70000+ வாக்குச்சாவடிகள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 75 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒட்டுமொத்தமாக 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் கிராமப்புறங்களில் 44 ஆயிரத்து 65 வாக்குச்சாவடி மையங்களும், நகர்ப்புறங்களில் 30 ஆயிரத்து 967 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கான சராசரி வாக்காளர்களின் எண்ணிக்கை 756 ஆகும். அதேநேரம், குறைந்தபட்சமாக தேனி மாவட்டம் வருசநாடு தாலுக்காவில் உள்ள வெள்ளிமலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வெறும் 5 பேர் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்த வாக்குச் சாவடிகளில் 265 மையங்கள் மாதிரி வாக்குச்சாவடிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. 258 மையங்கள் முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்பட உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இணையவழி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்ய பல்லடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில காவல்துறை, ஆயுதப்படை மற்றும் துணை ராணுவ படையினர் என ஒரு லட்சத்து 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 5 ஆயிரத்து 938 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஏற்கனவே, பரப்புரை முடிந்ததுமே தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















