TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
Tamil Nadu By-Election 2026: 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளைத் தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல். தேர்தல் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்ப்பு.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளைத் தொடங்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். வரும் 22ஆம் தேதிக்குள் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில், விஜய் தான் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றதால் (பெரம்பூர், திருச்சி கிழக்கு) அதில் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார். மேலும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியானது.
திருச்சி கிழக்கு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவித்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 151-A படி, காலியிடம் ஏற்பட்ட 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தொகுதி அல்லது மாவட்டத்தில் MCC அமலில் வரும். அரசின் புதிய அறிவிப்புகள், விளம்பரங்கள், நலத்திட்ட அறிவிப்புகள் போன்றவை தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அமைச்சர்களின் பயணங்கள் மற்றும் அரசு வளங்களின் பயன்பாடு கண்காணிக்கப்படும். தங்களது சொந்த தொகுதியில் தேர்தலில் பணியாற்றும் அதிகாரிகள் பணியாற்றக் கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் அதே இடத்தில் பணியாற்றியிருந்தால் மாற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 22ஆம் தேதிக்குள் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டதால் அடுத்த மாதம் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்



















