‘அடுத்த சாவு நீதான்’ - பயத்தில் தந்தை தற்கொலை; மகள் மரண வழக்கில் ஜாமீனில் வந்தவர்கள் அட்டகாசம் - நடந்தது என்ன?
மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்து மிரட்டியதால் தந்தையும் தற்கொலை செய்ததால் அதிர்ச்சி

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே மகள் தற்கொலை தொடர்பாக சிறைக்கு சென்று ஜாமினில் வெளியில் வந்தவர்கள் கொலை மிரட்டலால் விடுத்ததால் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் ரஜினி (44), கோமதி (42) தம்பதியினர். இவர்களின் மகள் தர்ஷினி (15). பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியான இவர், கடந்த 14.04.2026 தேதி அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து இறந்துபோன தர்ஷினியின் தற்கொலைக்கு அதே பகுதியை சேர்ந்த ரேவதி, நித்தின்குமார், இலக்கியா, செங்குட்டுவன் என்பவர்கள்தான் காரணம் என்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செங்குட்டுவனை தவிர தேவகி, நித்தின்குமார், இலக்கியா ஆகிய மூன்று பேரை பிடித்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், வெளியில் சுற்றித்திரிந்த செங்குட்டவன் இறந்துபோன தர்ஷினியின் தந்தை ரஜினி மற்றும் ரஜினியின் மகன் சந்தோஷ் ஆகியோரை அவ்வப்போது கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக ரஜினி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் அளித்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
Also Read| DMK Reshuffle : ’துரைமுருகன் ராஜினாமா?’ திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்..?
ஜாமினில் வெளியே வந்தவர்கள் கொலை மிரட்டல்
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட மூவர் ஜாமினில் வெளிவந்த நிலையில் அவர்களில் ஒருவருக்கு அம்மா உணவகத்தில் பணியும் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இம்மூவரும் அடிக்கடி இறந்து போன தர்ஷினியின் வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ள சந்தோஷ் மற்றும் அவரது தந்தை ரஜினியை ஆபாசமாக வார்த்தைகளால் திட்டி உங்களால் என்ன செய்ய முடியும், நாங்கள் வெளியே வந்து விட்டோம், யாரும் எங்களை எதுவும் செய்ய முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த சாவு நீதான் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
குற்றவாளி என சிறைக்கு சென்று வந்தும் கூட தன்னையும், தன்மகனையும் இவ்வாறு அவமானப்படுத்துகிறார்களே என்று மன உளைச்சலில் இருந்த ஆட்டோ டிரைவர் ரஜினி இன்று காலை தன் மரணத்திற்கு யார் காரணம் என்பதை வீடியோ பதிவு செய்து வெளியிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றியவுடன் வீடியோவில் பதிவு செய்த குற்றவாளிகள் எவரையும் குறிப்பிடாமல் ரஜினியின் சாவுக்கு மனஉளைச்சலும், கணவன் மனைவி இடையே ஆன தகராறின் காரணமாகத்தான் ரஜினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரஜினியின் குடும்பத்தாரிடம் அடிக்கடி போலீசார் எழுதி வாங்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இது இறந்துபோன ரஜினி குடும்பத்தார் மற்றும் உறவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சாவுக்கு யார் காரணம் என்பதை சரியாக புகாரியில் பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் ஆட்டோ டிரைவர் ரஜினியின் குடும்பத்தினர் கெஞ்சி கதறி அழுத சம்பவம் பார்ப்போரின் கண்ணீல் கண்ணீரை வரவழைத்தது.
இரண்டு மாதத்திற்கு முன் 15 வயது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















