MK Stalin election campaign : செந்தில் பாலாஜி அவராக கோவைக்கு வரல.. Duty போட்டதே நான் தான்- இபிஎஸ்யை அலற விடும் ஸ்டாலின்
MK Stalin election campaign : பழனிசாமி அவர்களே, இனி பா.ஜ.க.வின் சட்டங்களுக்கு முட்டு கொடுக்கும்போது முந்திரிக்கொட்டை போல முந்திக் கொள்ளாதீர்கள். பொறுத்திருந்து, பார்த்துப் பக்குவமாக முட்டு கொடுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் மூக்குடைபடுவீர்கள் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நெருங்கும் தேர்தல்- கோவையில் ஸ்டாலின் பிரச்சாரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் வெறும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சிகள் வீதி வீதியாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் மேட்டுப்பாளையத்தில் திமுக சார்பாக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டவர், கோவைக்கு திமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் எடுத்துரைத்தார். இதனையடுத்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக உள்ள 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கூறினார்.
முதலைக்கண்ணீர் வடிக்கும் இபிஎஸ்
பிரச்சார கூட்டத்தில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், மேற்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தடை போட்ட ஒன்றிய NDA கூட்டணியைத் திருப்பூர் முற்றிலும் தடை செய்யும் என தெரிவித்தார். பெண்கள் இட ஒதுக்கீட்டுக்காக எடப்பாடி பழனிசாமி முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும் விமர்சித்தார். மகளிர் இட ஒதுக்கீட்டை இப்போதே நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தி.மு.க. கொண்டு வந்த மசோதாவை ஏன் உங்கள் கூட்டணி ஆதரிக்க மறுக்கிறது? எனவும் கேள்வி எழுப்பினார். எத்தனை மாறுவேடம் போட்டு வந்தாலும் சரி... மதவாத பா.ஜ.க.வால் தமிழ்நாட்டுக்குள் தலையெடுக்கவே முடியாது எனவும் உறுதியாக கூறினார்.
பாட்ஷாவை வெளியில் கொண்டு வந்துவிட்டாங்க
"கருப்புச் சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏற்றினால் Delimitation நின்றுவிடுமா?" எனக் கேட்டுச் சிரித்த பழனிசாமி கும்பலைப் பார்த்து இன்றைக்கு இந்தியாவே சிரிக்கிறது எனவும் ஸ்டாலின் விமர்சித்தார். பழனிசாமி அவர்களே, இனி பா.ஜ.க.வின் சட்டங்களுக்கு முட்டு கொடுக்கும்போது முந்திரிக்கொட்டை போல முந்திக் கொள்ளாதீர்கள். பொறுத்திருந்து, பார்த்துப் பக்குவமாக முட்டு கொடுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் மூக்குடைபடுவீர்கள்! எனவும் ஸ்டாலின் கூறினார். ஆட்டோ ஓட்டுகிற மாணிக்கம் போல், நாம் தேர்தல் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், சொல்ல சொல்ல கேட்காமல் தேர்தல் நேரத்தில் கருப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து, நமக்குள் இருக்கிற பாட்ஷாவை வெளியில் கொண்டு வந்துவிட்டார்கள். இனி எங்களை யாராலும் தடுக்க முடியாது எனவும் ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தார்.
கோவையில் செந்தில் பாலாஜி களம் இறங்கியது ஏன்.?
கரூர் மக்கள் செந்தில் பாலாஜியை புறக்கணித்து விட்டதால் கோவைக்கு வந்து போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி அவராக கோவைக்கு வரவில்லை. நான்தான் வர வைத்திருக்கிறேன். கரூரில் திமுகவின் வெற்றி கன்ஃபார்ம். கோவையிலும் வெற்றியை உறுதி செய்யவே செந்தில் பாலாஜிக்கு கோவையில் டூட்டி போட்டிருக்கிறேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பார்த்திருப்பீங்க, செந்தில் பாலாஜி கோவைக்கு வந்தார், உழைத்தார். வெற்றியை உறுதி செய்தார். இதனால் தான் பழனிசாமி பயந்த சாமியாக புலம்பி கொண்டிருக்கிறார். கோவையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்றது இப்போது நடக்காது. கோவை முழுக்க இந்த முறை நாம தான் ஜெயிப்போம். நாம மட்டும் தான் ஜெயிப்போம். கோவை உங்கள் கோட்டை என்பதில் எப்போதோ ஓட்டை போட்டு விட்டாச்சு, மக்கள் உதயசூரியன், கை சின்னத்திற்கு தான் வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.
நினைத்துப் பார்க்காத வித்தியாசத்தில் தோல்வி
2026 தேர்தலில் கோவை தி.மு.க.வின் கோட்டையாக வலிமை பெறும் என கூறிய அவர், நீலகிரி மாவட்டத்திலும் NDA கூட்டணி நினைத்துப் பார்க்காத வித்தியாசத்தில் தோல்வி அடையும் என தெரிவித்தார். ‘டபுள் எஞ்சின்’ அரசு இருந்தால்தான் வேலைகள் விரைவாக நடக்கும் என்று கோவையில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி அவர்கள். உங்கள் வேகம் எப்படி இருக்கும் என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்த்தே தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள்! தங்களின் வருகைக்கு நன்றி! Next, அடுத்த தேர்தல் சீசனில் சந்திப்போம்! எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

















