விஜய் - த்ரிஷாவை இணைத்து பேசிய நயினார் நாகேந்திரன்.. பொறாமைத் தீ என விமர்சித்த நாஞ்சில் சம்பத்!
விஜய் முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். த்ரிஷா வீட்டில் இருந்து வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.

நடிகை த்ரிஷா வீட்டில் இருந்து தவெக தலைவர் விஜய் வெளியே வர வேண்டும் என பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். அப்போது திமுக,அதிமுக கட்சிகளை சரமாரியாக விமர்சித்தார். இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், “அடுத்தவர்கள் ஆரம்பித்த கட்சியை அட்ரஸாக வைத்துக் கொண்டு சிலர் அரசியல்வாதிகள் என சொல்கிறார்கள். என்னை மாதிரி தனியா கட்சி தொடங்கி 1 சதவிகிதம் ஓட்டு வாங்கி காட்டுங்கள் பார்க்கலாம்” என விஜய் சொன்னது குறித்து கேள்வியெழுப்பட்டது.
அதற்கு, “அவர் அனுபவம் இல்லாதவர். விஜய் முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். த்ரிஷா வீட்டில் இருந்து வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்கும். குடும்பத்துடன் நல்ல உறவு வைக்கணும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கத்தை பற்றி நல்லதாக சொல்ல வேண்டும்.களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவர் பேசும் பேச்சாக உள்ளது. தனக்கு 30 சதவிகிதம் மக்கள் ஆதரவு இருப்பதாக சொல்லும் விஜய், அனுபவம் இருந்தால் தான் வரும். தான் ஒரு நடிகர் என்பதால் அவர் அப்படி சொல்லியிருக்கலாம். விஜய் எனக்கு ஒரு ஆளே கிடையாது. நம்பிக்கையில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஒரு சீட் கூட தவெக ஜெயிக்காது.
நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம்
இந்த நிலையில் தவெகவின் தேர்தல் பரப்புரை செயலாளரான நாஞ்சில் சம்பத் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார். அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா?
4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா? முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது” என கூறியுள்ளார்.




















