Lok sabha elections 2024: விழுப்புரம் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்
Lok sabha elections 2024 : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மொத்தம் 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளன்று இம்மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 12,095 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அந்த நிமிடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
விளம்பர பதாகைகள் அகற்றம்
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து மாவட்டத்தின் பல இடங்களில் ஏற்கனவே அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றும்படி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி அரசியல் கட்சியினர் தாங்கள் வைத்த விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் அரசியல் கட்சியினர், விளம்பர பதாகைகளை அகற்றாதபட்சத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் நகரில் புதிய பஸ் நிலையம், நகராட்சி திடல், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், கிழக்கு புதுச்சேரி சாலை உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஆணையர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் மதன்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டத்தின் பல இடங்களில் இருந்த அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருந்த அரசியல் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களின் புகைப்படங்களும் அகற்றப்பட்டன.





















