வெற்றி திலகமிட்ட மனைவி, தாயின் காலில் விழுந்து வேட்புமனு தாக்கல்; மாஸ் காட்டிய திமுக சிட்டிங் எம்எல்ஏ!
தாயின் காலில் விழுந்து ஆசி பெற்று வேட்புமனு தாக்கல் செய்த திமுக சிட்டிங் எம்எல்ஏ! மூன்றாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என வெற்றி திலகமிட்ட மனைவி, தாய்!

திருப்பத்தூரில் மூன்றாவது முறையாக திமுக சார்பில் போட்டியிடும் நல்லதம்பி தனது தாயின் காலில் விழுந்து ஆசிபெற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
2026 சட்டமன்ற பொதுதேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரிர் இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக உள்ள நல்லதம்பிக்கு திமுக சார்பில் மூன்றாவது முறையாக சீட்டு ஒதுக்கப்பட்டதால் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தாயின் காலில் விழுந்து வேட்புமனு தாக்கல்
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக வந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது வரும் வழியில் நல்ல தம்பியின் தாயார் மற்றும் அவருடைய மனைவி காத்திருந்தனர். அப்போது வேட்பாளர் தனது தாயின் காலில் விழுந்து வாழ்த்துகள் பெற்றார். அதன் பின்னர், வேட்பாளரின் நெற்றியில் தாய், மனைவி பொட்டு வைத்து வாழ்த்து தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்ய வழி அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் வேட்பாளர் நல்லதம்பி தேர்தல் நடத்தும் அலுவலர் வரதராஜனிடம் கூட்டணி கட்சியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின் போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஆணையிட்டு,தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதாக அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

3ஆவது நாளிலும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பு
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மூன்றாவது நாளிலும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
3ஆவது நாளில் சுமார் 700 பேர் வேட்புமனு
மூன்றாவது நாளான இன்றும் 700க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், நாசர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுந்தர்.சி, சிந்தனைச் செல்வன், வன்னிஅரசு ஆகியோர் வேட்புமனு தாகல் செய்தனர்.
2000-ஐ தாண்டிய வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. முதல் நாளில் 573 பேரும், இரண்டாவது நாளில் 788 பேர் என இரண்டு நாட்களில் 1361 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாளாகும். ஏப்ரல் 7ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாளாகும்; அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.




















