(Source: ECI | ABP NEWS)
ஜெ.வைப்போல அரசியல் ஆண்மை இருக்கிறதா?- தேர்தலுக்குப் பின் அதிமுகவே இருக்காது- பாஜக பகீர்!
கூட்டணியே வேண்டாம் என்று ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார். நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டி இட்டிருக்கிறீர்களா?
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்னும் கட்சியே இருக்காது என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் அனல் பறக்க நடந்து வருகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டமாகவே தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கூட்டணிக் கட்சி வேட்பாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருமான சு.வெங்கடேசன் களம் காண்கிறார். அதிமுக சார்பில் மருத்துவரும் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சரவணன் போட்டி இடுகிறார். பாஜக சார்பில் மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியிட உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா தேவி என்னும் வேட்பாளர் களம் காண்கிறார்.
நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த ராம ஸ்ரீனிவாசன், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்னும் கட்சியே இருக்காது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும்போது அவர் கூறியதாவது:
எந்தத் தேர்தலில் ஆவது ஒன்றரை கோடி வாக்குகளைப் பெற்றதுண்டா?
அதிமுக பாஜகவைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட எஃகுக் கோட்டை என்று கூறுகிறீர்கள். ஜெயலலிதா இறந்தபிறகு அதிமுக எந்தத் தேர்தலில் ஆவது ஒன்றரை கோடி வாக்குகளைப் பெற்றதுண்டா? எப்போது வாங்கினீர்கள்?
கூட்டணியே வேண்டாம் என்று ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார். நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டி இட்டிருக்கிறீர்களா? ஜெயலலிதாவுக்கு இருந்த அரசியல் ஆண்மை உங்களுக்கு (எடப்பாடி பழனிசாமி) இருக்கிறதா? ஏதோ பெரிதாக வாள் எடுத்து வீசிக் கொண்டிருக்கிறீர்கள்?
அதிமுக என்னும் கட்சியே இருக்காது
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்னும் கட்சியே இருக்காது. ஏனெனில் அக்கட்சிக்கு செல்வாக்கு இருக்காது. பெரும்பாலான இடங்களில் மூன்றாமிடம்தான் வரும். ஓரிரு தொகுதிகளில் இரண்டாம் இடம் வரலாம். அல்லது வெல்லலாம். அது எனக்குத் தெரியவில்லை. ஆனால் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும்.
எடப்பாடி பழனிசாமி ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லை. எவ்வளவு சரிவைச் சந்தித்தாலும் எம்ஜிஆர், ஜெ.வால் கட்சியை மீட்டுக் கொண்டு வர முடியும். ஆனால் எடப்பாடி அத்தகைய ஆளுமை மிக்க தலைவர் அல்ல. கட்சியினரும் அதை நம்பவில்லை.
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தொடர்வது சந்தேகம்தான்
கட்சியில் மிகப்பெரிய மாற்றம் தேர்தலுக்குப் பிறகு நடக்கும். தேர்தலுக்குப் பின்பு, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தொடர்வது சந்தேகம்தான்.
எடப்பாடி பழனிசாமியால் அடுத்த பிரதமர் மோடி அல்லது ராகுல் காந்தி என்று சொல்லி விட முடியுமா? அல்லது மோடியா லேடியா என்று ஜெயலலிதா கேட்டார். அப்படிக் கேட்கும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? என்ன கட்சி நடத்துகிறார்கள்?’’
இவ்வாறு ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்னும் கட்சியே இருக்காது என்று பாஜக பொதுச் செயலாளர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.