"ஆட்சி அமைக்கவே முடியாது!" - இண்டியா கூட்டணிக்கு 'முற்றுப்புள்ளி' ... புதுச்சேரி அரசியலை அலறவிட்ட அண்ணாமலை!
உலகில் எங்கும் நடக்காத ஒரு விசித்திரமான கூட்டணி புதுச்சேரியில் இண்டியா கூட்டணியாக உள்ளது - அண்ணாமலை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இண்டியா (INDIA) கூட்டணியைக் கடுமையாகச் சாடியுள்ளார். அக்கூட்டணியால் ஒருபோதும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அமைத்துள்ளது. அதன்படி, என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 14 தொகுதிகளும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கூட்டணிக்கு தலா இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப்ரல் 4-ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார்.
பிரதமர் வருகையை ஒட்டி தமிழக பாஜக தலைவர்கள் புதுச்சேரியில் முகாமிட்டு வருகின்றனர். கோயம்புத்தூரில் இருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி வந்த தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"உலகில் எங்கும் நடக்காத ஒரு விசித்திரமான கூட்டணி புதுச்சேரியில் இண்டியா கூட்டணியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஆறு பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். அவர்கள் கட்சியைத் தாண்டி வேட்பு மனு தாக்கல் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதிலிருந்து புதுச்சேரியில் குழப்பமான கூட்டணி என்றால் அது இண்டியா கூட்டணி தான் என்பது தெளிவாகத் தெரிகிறது."
கூட்டணி தர்மம் மீறல்:
"திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி தர்மத்தை மீறி 3 இடங்களில் போட்டியிடுகின்றனர். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 3 இடங்களில் போட்டியிடுகின்றன. குறிப்பாக சில பகுதிகளில் திமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என நான்கு வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இதனால் மக்களுக்குப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது."
தோல்வி உறுதி:
"இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, மக்களுக்காக எப்படி ஒரு ஒழுக்கமான ஆட்சியைத் தர முடியும்? இவர்களால் ஒரு கூட்டணியைக் கூட ஒழுங்காக அமைக்க முடியவில்லை. 30 தொகுதிகளில் தொகுதிப் பங்கீடு செய்து அந்தப் பேச்சைக் கூட அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இவர்கள் எப்படி ஐந்து வருட காலம் நல்லாட்சி வழங்க முடியும்?
கூட்டணி அமைப்பதில் தோல்வி, வேட்புமனுத் தாக்கல் செய்வதில் தோல்வி என எல்லா வகையிலும் இண்டியா கூட்டணி தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், தேர்தல் நாளில் அவர்கள் மிகப்பெரிய தோல்வியைத் தழுவுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை" என்று அண்ணாமலை கூறினார்.




















