''10 மணிக்கு முன்பே வரணும்'' யாருக்கெல்லாம்? பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு
பெரும்பாலான பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் காலை 10 மணிக்கு முன்பே அலுவலகம் வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள சுற்றறிக்கையில், அனைத்து அலுவலக உதவியாளர்கள், பதிவேடு எழுத்தர்கள் காலை 9.30 மணிக்கே வர வேண்டும் என்று துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. , அலுவலகத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை அலுவலர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிகாரிகள், பணியாளர்கள் காலை 10 மணிக்கு முன்பே அலுவலகம் வர வேண்டும்
எந்தவொரு விடுப்பு (CL/ EL) / அனுமதியைப் பெறுவதற்கும், விடுப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுந்த குற்றச்சாட்டு
பெரும்பாலான பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் அவை சரிவரக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மாற்றி அமைக்கப்பட்ட பணி நேரம்
முன்னதாக கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் உதவியாளர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
பின்னர் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை பணி நேரம் மாற்றப்பட்டது. இதற்கு பல்வேறு சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து பழையபடியே 10 மணி முதல் 5.45 மணி வரை பணி நேரம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆசிரியர்களின் பணி நேரம் என்ன?
* காலை 9.00 மணி முதல் மாலை 4.10 மணி முடிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வேலை நேரம் செயல்படுகிறது.
* தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கும் மற்றும் ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும் வருகை தர வேண்டும்.
* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வேலை நேரம் காலை 9.20 மணி முதல் மாலை 4.20 முடிய உள்ளது.
* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்கு வருகை தர வேண்டும்.
* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























