TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே... 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
Tamil Nadu 12th Result 2025 Date: 12ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் 17ஆம் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெற்றன.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்களில், அதாவது மே 9ஆம் தேதி வெளியாக உள்ளன. இதை தமிழக பள்ளிக் கல்வித்துறை உறுதிப்படுத்தி உள்ளது.
தேர்வு தேதிகள் என்னென்ன?
2024- 25ஆம் கல்வி ஆண்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி, மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. கடைசி நாளான மார்ச் 25ஆம் தேதி இயற்பியல் மற்றும் பொருளாதார பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்காகத் தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தேர்வு முடிவுகள் எப்போது?
12ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் 17ஆம் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளன. தகவல் வெளியாகியுள்ளது. இதை தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
மாணவர்கள் தங்களின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது?
அதேபோல சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
10ஆம் வகுப்புக்கு எப்படி?
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவர்களுக்கான தேர்வு முடிவுகளும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் மே 19ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாக உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஆண்டு 94.56 % தேர்ச்சி
கடந்த ஆண்டு மே 6ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநிலம் முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 94.56 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.53 சதவீதம் அதிகம் ஆகும். இதில் மாணவிகள் 96.44 சதவிகிதமும், மாணவர்கள் 92.37 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றனர்.
மொத்தமாக 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய நிலையில், அவர்களின் மாணவர்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 பேரும், மாணவியர்கள் 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 பேரும் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில், 97.45 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 97.42 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்தன. அரியலூர் மாவட்டம் 97.25 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்தது ,குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: tnresults.nic.in, dge.tn.gov.in


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

