அடி தூள்... இந்த பள்ளிக் கல்வி ஊழியர்களுக்கெல்லாம் ஊதிய உயர்வு- பட்டியல் போட்ட அரசு!
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் பணியாற்றும் ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தாது- மாநில திட்ட இயக்குநர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் ஓராண்டுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறையின் மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
யாருக்கெல்லாம் பொருந்தும்?
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அமைப்பு ஆய்வாளர், புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், உதவியாளர், ஸ்வீப்பர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.
எப்போதில் இருந்து ஊதிய உயர்வு?
இந்த ஊதிய உயர்வு நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு, வழங்கப்பட உள்ளது.
யாருக்குக் கிடையாது?
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் பணியாற்றும் ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தாது எனவும், ஊதிய உயர்வு பெற சம்பந்தப்பட்ட ஊழியர்கள் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பாகவே பணியில் சேர்ந்து, ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.






















