CTSE: அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு; மாதாமாதம் உதவித்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?
CTSE 2025: தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ( மெட்ரிக் / CBSE / ICSE / உட்பட ) மாணவர்கள், இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

2025ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு , அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:
பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் " தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு " நடத்தப்பட்டு வருகிறது.
மாதாமாதம் உதவித்தொகை
2025- 2026 - ஆம் கல்வியாண்டிற்கான " தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு " 11-10-2025 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ .1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.
இந்தத் தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
தேர்வுத் திட்டம் எப்படி?
தமிழ்நாடு அரசின் 2025- 2026ஆம் கல்வியாண்டில் வெளியிடப்பட்ட திருத்தி அமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள ஏழு ( 7 ) இயல்களில் கடந்த ஆண்டில் மாணவர்கள் பயிலாத " இயல் 2 - ல் உள்ள மேகம் , பிரும்மம் ; இயல் 6 - ல் முத்தொள்ளாயிரம் ; மற்றும் இயல் 7 - ல் அக்கறை " ஆகிய 4 தலைப்புகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் . இத்தேர்வு கொள்குறி வகையில் நடத்தப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2025-2026 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ( மெட்ரிக் / CBSE / ICSE / உட்பட ) மாணவர்கள் , 11.10.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை 04.09.2025 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 04.09.2025 என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.






















