அமைதி காக்கும் ஆசிரியர் வாரியம்; உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவு குளறுபடிக்கு தீர்வு எப்போது?
உதவிப்பேராசிரியர் தேர்வு: பூஜ்ஜிய மதிப்பெண் குளறுபடி! ஆசிரியர் வாரியம் விளக்கம் தருமா?

உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நீண்ட நாட்களாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர் நியமனம் இல்லாதிருந்த நிலையில், 61 பாடங்களுக்கு, 2,708 உதவிப்பேராசிரியர் நியமனங்களுக்கு, 27.12.2025 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
4 மாதங்கள் கழித்து தேர்வு முடிவுகள்
நியமனங்கள் குறைவாக இருந்த, 5 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 25.02.2026 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பணி நியமனங்கள் நடைபெற்றன. மீதமிருந்த 56 பாடங்களுக்கு 25.06.2026 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
விவரித்து எழுதுதல் கேள்விக்கான மதிப்பெண் வழங்கியதில் பெருமளவில் குளறுபடிகள் நடைபெற்றதாக பரவலாக சொல்லப்படுகிறது.
கீழ்க்கண்ட அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்றன.
முதல் தாள்
இரண்டு பகுதிகள்.
இரண்டு பகுதிகளும், விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறை.
முதல் பகுதி, கட்டாய தமிழ். இது அனைவருக்கும் பொதுவானது.
இதில் 50 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் கட்டாயத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால், அடுத்த இரண்டு தாள்களும் மதிப்பீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும், இந்த தமிழ் தேர்வுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. 6958 பேர், கட்டாய தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.
இரண்டாவது பகுதியில், அந்தந்த பாடங்களிலிருந்து 100 வினாக்கள், 150 மதிப்பெண்கள்.
இரண்டாம் தாள் விவரித்து எழுதுதல். அனைவருக்கும் பொதுவானது. இந்திய அரசியல் அமைப்பு, இந்திய பொருளாதாரம், நவீன இந்திய வரலாறு, தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பொருளாதாரம், சுற்றுச்சூழல், அறிவியலும், தொழில் நுட்பமும், தற்கால நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் இருந்து ஐந்து கேள்விகள் கேட்கப்படும், ஏதாவது ஒரு கேள்விக்கு மட்டும் விடையளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மதிப்பெண் 50.
முதல் தாளின் இரண்டாம் பகுதி தேர்வுக்கான 150 மதிப்பெண்களும், இரண்டாம் தாளின் 50 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு , இட ஓதுக்கீடு பிரிவினராக இருந்தால், 35%, இட ஓதுக்கீடு அல்லாத பிரிவினராக இருந்தால் 40% மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே தகுதியுடையவர்களாவர்கள் என்றும் இவர்களில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
காலிப்பணியிடங்கள் 5 க்கு அதிகமாக இருந்தால் மதிப்பெண் அதிகம் பெற்றவர்களில் இருந்து ஒரு பணியிடத்து இருவர் என்ற அடிப்படையிலும், பணியிடம் 5 க்கும் குறைவாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு, ஒரு பணியடத்திற்கு மூன்று பேர் என்ற அடிப்படையிலும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்முகத்தேர்வு அனைவருக்கும் 15 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியான தேர்வு முடிவுகளில், விவரித்து எழுதுதல் கேள்விக்கு பூஜ்யம் உள்ளிட்ட மிக்குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன.
எழுப்பப்படும் புகார்களுக்கு, உரிய விளக்கங்களையும், தெளிவுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























