Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் விடிய விடிய போராட்டம் நடத்தி பாஜகவை மிரள வைத்துள்ளனர். அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை இளைஞர் படை அதிரவைத்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என சொன்னதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் அபிஜீத் திப்கே என்பவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் தொடங்கிய சமூக வலைதள கணக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்தது. தற்போது இது மிகப்பெரும் இளைஞர்கள் படையாக உருவாகியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது இந்தக் கட்சி. இந்தநிலையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது.
கரப்பான் பூச்சி கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. நேற்று போராட்டம் ஆரம்பமான நிலையில் அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என இளைஞர்கள் எச்சரித்துள்ளனர். ஜந்தர் மந்தரில் விடியவிடிய போராட்டம் நடந்து வருகிறது.
இளைஞர்கள் போராட்ட களத்திலேயே தூங்கி அங்கேயே கிரிக்கெட் விளையாடும் காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன. நேற்று மாலை 5 மணி வரை மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதையும் தாண்டி காக்ரோச் கட்சியினர் கலைந்து செல்லாததால் போலீசார் இரவில் மின்சாரத்தை துண்டித்தனர். இருந்தாலும் மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் இளைஞர்கள் அதே இடதிலேயே அமர்ந்திருந்தனர். பின்னர் பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்து போலீசார் மீண்டும் மின்சார வசதி மீண்டும் வழங்கப்பட்டது.
கொரோனா காலத்தில் பிரதமர் மோடி தட்டு வைத்து அடிக்கச் சொன்னதைக் குறிப்பிட்டு, இந்த சத்ததால் கொரோனாவை விரட்ட முடியும் என்றால், தர்மேந்திர பிரதானையும் விரட்ட முடியும் என சொல்லி போராட்டத்தில் தட்டு வைத்து சத்தம் எழுப்பினர். மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் போதும் அமைச்சர் பதவி விலகினால் தான் பேச்சுவார்த்தைக்கே வருவோம் என காக்ரோச் கட்சியினர் முடிவாக இருக்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம், மணிப்பூர் போராட்டம், விவசாயிகள் போராட்டம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய நிலையில் தற்போது காக்ரோச் இளைஞர்கள் போராட்டம் பாஜகவுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















