CM Vijay | "இடைத்தேர்தலில் சீட் இல்லை" கைவிரித்த CM விஜய்! ADMK-ல் இருந்து வந்தவர்கள் ஷாக்
MLA பதவியை உதறிதள்ளிவிட்டு அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய 4 பேருக்கும் இடைத்தேர்தலில் சீட் இல்லை என விஜய் கைவிரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் தமிழக அரசியல் களத்தையே புரட்டி போட்ட நிலையில் அடுத்ததாக இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறது தமிழ்நாடு. திருச்சி கிழக்கு உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற பெருந்துறை ஜெயகுமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு தாவினர். அதோடு சேர்த்து விஜயபாஸ்கரும் விராலிமலை MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். ஆனால் அவர் வேறு எந்தக் கட்சிக்கு செல்லப் போகிறார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
காலியாக உள்ள இந்த 6 தொகுதிகளுக்கும் அரசியல் கட்சிகள் டார்கெட் வைத்துள்ளன. இதில் திருச்சி கிழக்கு தவிர எந்த தொகுதியிலும் தவெக வெற்றி பெறாததால் இடைத்தேர்தலில் தொகுதிகளை தங்கள் வசமாக்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். அதேபோல் திமுகவும், அதிமுகவும் தங்கள் கட்சிகள் பலமாக இருக்கும் தொகுதிகளில் தவெகவை நுழைய விடக் கூடாது என்பதில் முடிவாக இருக்கின்றனர்.
இந்தநிலையில் அதிமுகவில் இருந்து MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் சீட் கொடுக்க முதலமைச்சர் விஜய் ரெடியாக இல்லை என சொல்கின்றனர். தொகுதிகளில் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறதோ அதை கணக்கு போட்டு சீட் கொடுக்க தான் விஜய் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இடைத்தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்பதால் கிடைக்கும் தொகுதிகளை விட்டுவிடக் கூடாது என்பதில் விஜய் கவனமாக இருக்கிறது.
அதிமுகவில் இருந்து வந்தவர்கள் MLA பதவியை ராஜினாமா செய்துள்ளதால் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது. மேலும் அதிமுகவுக்கு விழுந்த வாக்குகள் என்பதால், இந்த முறையும் அவர்களுக்கே சீட் கொடுத்தால் அதிமுகவின் வாக்கு வங்கி தவெகவுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதால் விஜய் அவர்களுக்கெல்லாம் இடைத்தேர்தலில் சீட் கிடையாது என கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்களுக்கு கட்சியின் வேறு ஏதாவது முக்கியமான பதவி கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்கின்றனர். இருந்தாலும் தவெக சார்பாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று கட்சியில் செல்வாக்கு பெறலாம் என நினைத்து வந்தவர்கள் தற்போது சீட் இல்லாததால், ஏற்கனவே இருந்த MLA பதவியையும் விட்டுவிட்டோமே என நொந்து இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















