TN 12th Result 2026: முதல்முறை; இனி வாட்ஸப்லயே பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காணலாம்- எப்படிங்க?
Tamil Nadu 12th Result 2026: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை 7845252525 என்ற வாட்ஸப் எண்ணிலேயே காணலாம். எப்படி?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ள நிலையில், முதல் முறையாக வாட்ஸப்பிலேயே தேர்வு முடிவுகளைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு முடிவுகள் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் மூலம் SIEMAT Hall, SCERT, DPI-ல் வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளிகளிலும் காணலாம்
பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணாக்கர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
வாட்ஸப் மூலம் காண்பது எப்படி?
- Whatsapp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைக்கவும்.
- அந்த எண்ணில் "Hi" எனப் பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தெரிவு செய்யவும்.
- தொடர்வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பவும்.
- அதில் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம்.
இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் Whatsapp செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மாணவர்கள் நம்பிக்கையுடனும் தங்களது தேர்வு முடிவுகளை தைரியத்துடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் ஒருவரின் வாழ்க்கை, திறமை அல்லது தன்மதிப்பை நிர்ணயிப்பவை அல்ல. தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றாலும் நம்பிக்கையை இழக்கவோ, தமக்குத் தாமே தீங்கு விளைவிக்கவோ அல்லது எவ்வித தீவிரமான முடிவுகளையும் எடுக்கவோ கூடாது.
பள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சி
ஒவ்வொரு மாணவரும் வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் முன்னேறி வெற்றி பெறும் திறன் கொண்டவர்கள்; மேலும் எதிர்காலத்தில் பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு ஆதரவாக பள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும்.
இக்காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையுடனும் அக்கறையுடனும் புரிதலுடனும் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தேவையின் அடிப்படையில் வழிகாட்டுதல், ஊக்குவித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் நேர்மறை எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி எண்கள்: 14417 / 104 / 14416 என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















