CM Vijay: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு, பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் விஜய் ஆலோசனை
முதலமைச்சர் விஜய் தலைமையில் பள்ளி கல்வித்துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20ஆம் தேதி) வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்படு இருந்த நிலையில் அதுகுறித்தும் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு பற்றியும் முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்ட வகையில் மே 8ஆம் தேதி அன்று வெளியாகின. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிய அரசு ஆட்சியமைக்கும் முன்னரே திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல் முறையாக வாட்ஸ் அப் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது?
இந்த நிலையில், மே 20ஆம் தேதி 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திட்டமிட்ட தேதிகளில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அதேபோல கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா அல்லது திட்டமிட்ட தேதியில் திறக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை
இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் பள்ளி கல்வித்துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், துறை சார் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























