மேலும் அறிய
சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம்.. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்தது எப்படி?
SSLC பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் – சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெருமிதம் வெளியிட்டார்.

மாணவ - மாணவிகள்
Source : சிறப்பு ஏற்பாடு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.31% தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் 97.49% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் முதன்மை இடத்தை கைப்பற்றியுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
2024 - 25 -ஆம் கல்வி ஆண்டுக்கான 10 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 -ஆம் தேதி வரை நடைபெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 -ம் தேதி தொடங்கி 28 -ஆம் தேதி நிறைவு பெற்றது. தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 21 -ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்றது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் 11 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது.
வெளியான முடிவுகள்
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெளியாகியதில், 93.80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 4,17, 183 பேரும், மாணவர்கள் 4,00,078 தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் 98.31% தேர்ச்சி
2025ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.31% தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் 97.49% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் முதன்மை இடத்தை கைப்பற்றியுள்ளது.
வெற்றிக்கு காரணம் இது தான்
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,”இந்த சாதனையைப் பெற முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டலும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விடாமுயற்சியும், திட்டமிட்ட வகுப்புகள் மற்றும் அதிகப்படியான மாதிரி தேர்வுகள் மூலம் மாணவர்கள் நன்கு தயாராகினர். கல்வித்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஊக்கமளித்ததும், ஆசிரியர்கள் தங்கள் பாடங்களில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க எடுத்த நடவடிக்கைகளும் இந்த வெற்றிக்கு காரணம்" என்றார்.
98.05% தேர்ச்சி விகிதத்துடன் தேர்த்தி
சிவகங்கை மாவட்டம் முழுவதும் 278 பள்ளிகளில் இருந்து 17,679 மாணவர்கள் (மாணவர்கள் – 8,870, மாணவிகள் – 8,809) தேர்வு எழுதினர். இதில் 17,380 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் (மாணவர்கள் – 8,662, மாணவிகள் – 8,718). 175 பள்ளிகள், அதில் 79 அரசு பள்ளிகள், 100% தேர்ச்சி விகிதம் பெற்றன. 2017–18ஆம் ஆண்டிலும் 98.05% தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றதை கல்வி அலுவலர் நினைவுகூர்ந்தார்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















