அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
மாணவர்கள் இடைநிற்றல் குறைந்தாலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே ஆசிரியருடன் இயங்குகின்றன: அதிர்ச்சித் தரவுகள்

நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பள்ளிகள், ஒற்றை ஆசிரியருடன் இயங்கி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை தொடக்க, இடைநிலைப் பள்ளி அளவில் கடந்த ஆண்டில் குறைந்த நிலையிலும் ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன.
இந்தியாவில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் குறைந்து வரும் நிலையிலும், நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் தலா ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்குவது மத்திய அரசின் சமீபத்திய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள UDISE+ அறிக்கையின்படி, கல்வித்துறையில் நிலவும் இந்த முரண்பாடான நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அறிக்கையின் முக்கியத் தகவல்கள் இதோ!
ஒற்றை ஆசிரியர் பள்ளிகள்
நாடு முழுவதும் 1,00,843 பள்ளிகள் வெறும் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இது இந்தியாவில் உள்ள மொத்த பள்ளிகளில் தோராயமாக 8 சதவீதமாகும். இதில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆந்திரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 16,357 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதேபோல ஜார்க்கண்டில் 9,827 பள்ளிகளும் பஞ்சாப்பில் 1,749 பள்ளிகளும் இயங்கி வருகின்றன. ஒருவரே அனைத்து வகுப்புகளையும், நிர்வாகப் பணிகளையும் கவனிப்பது கல்வியின் தரத்தைப் பாதிப்பதாக அமைந்துள்ளது.
குறைந்து வரும் இடைநிற்றல்
ஆசிரியர் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் 1.5 சதவீதமாகவும், உயர் தொடக்கப் பள்ளிகளில் 3 சதவீதமாகவும், இடைநிலைப் பள்ளிகளில் 12.6 சதவீதமாகவும் சரிந்துள்ளது. மாணவர்கள் கல்வியைத் தொடர்வது அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.
மாநில வாரியான நிலவரம்
அதேபோல மாணவர் சேர்க்கையே இல்லாமல் ஒரே ஆசிரியரைக் கொண்டு இயங்கும் பள்ளிகளும் நாட்டில் உள்ளன. இதில் சண்டிகர், கோவா, டெல்லி, டையூ டாமன், லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் ஹரியாணா மாநிலங்களில் மாணவர்களே இல்லாமல் ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகள் இயங்கி வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள 14,66,682 பள்ளிகளில், 5,663 பள்ளிகள் இவ்வாறு இருக்கின்றன. இதில் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 4,133 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
கட்டமைப்பு மேம்பாடு
பள்ளிகளில் இணையதள வசதி, கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் முந்தைய ஆண்டுகளை விட மேம்பட்டுள்ளன.
பள்ளிகளில் மாணவர்களைத் தக்கவைப்பதில் அரசு வெற்றி பெற்றிருந்தாலும், அதற்கேற்ப ஆசிரியர்-மாணவர் விகிதத்தை (PTR) சமநிலைப்படுத்தி, காலிப்பணியிடங்களை நிரப்புவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை இந்த UDISE தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்























