விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு! பெற்றோர்கள் அதிர்ச்சி- நீதிமன்றம் சொன்னது என்ன?
விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் காலாண்டு விடுமுறை அமலில் உள்ள நிலையில், சில தனியார் பள்ளிகளில் விடுமுறைக் காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
உயர் நீதிமன்ற ஆணையின் படி காலாண்டு /அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடைபெறாமல் இருக்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த சுற்றறிக்கை இப்போதும் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ’’மொஹைதீன் அப்துல் காதர் என்பவரின் இரு மகள்கள் ஆயிஷா ஷாஜனா மற்றும் அனபா இர்னாஸ் ஆகியோரை சிறப்பு வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையின்றி வருகைப் புரிந்தால் மட்டுமே கோல்டன் ஜுப்ளி பள்ளியில் பயில அனுமதிக்க இயலும் என்று எழுதி வாங்கப்பட்டது. இது சார்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாரர் மொஹைதீன் அப்துல் காதர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு சார்ந்து, பள்ளி நிர்வாகத்தால், சிறப்பு வகுப்புகளுக்கு வருகைப் புரிவது கட்டாயமில்லை எண சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு 02.07.2024 அன்று மேல் நடவடிக்கை இன்றி முடித்து வைக்கப்பட்டது.
அனைத்து பள்ளிகளுக்கும் உரிய அறிவுரை
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறாமல் இருக்க தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய அறிவுரை வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தனியார் பள்ளிகள்) அறிவுறுத்தப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















