"அரசு வேலை நிவாரணம் வேணாம்" நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர் திரும்பிசென்ற அமைச்சர்கள்
நாகர்கோவிலில் சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்தினரை அமைச்சர்கள் ஸ்ரீநாத் மற்றும் ராஜேஷ்குமார் நேரில் சந்தித்த நிலையில், தங்களுக்கு நிவாரணத் தொகையும் வேண்டாம், அரசு வேலையும் வேண்டாம் என்று குடும்பத்தினர் அவர்களைத் திருப்பியனுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குட்கா விற்றதாக சிறையில் அடைக்கப்பட்ட சபரிவர்மன், ஜூலை 13-ம் தேதி திடீரென உயிரிழந்தார்.
உடல்நலக்குறைவால் அவர் இறந்துவிட்டார் என்று போலீஸார் கூறினாலும், சபரிவர்மனின் குடும்பத்தினர் போலீஸார் அவரை அடித்தே கொன்றுவிட்டனர் என்று குற்றம்சாட்டினார்.
அதற்கேற்றார்போலவே மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற உடற்கூராய்வில், சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, சிறை வார்டன்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சபரிவர்மனின் உடலை வாங்காமல் இருக்கின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் நேற்றிரவு சபரிவர்மன் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர்.
அப்போது, அரசு வேலை, நிவாரண உதவி வழங்குவதாகவும், உடலைப் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்யுமாறும் அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இதனை ஏற்றுக்கொள்ளாத சபரிவர்மன் குடும்பத்தினர், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வீடியோவை தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும், அதனை தங்களுக்கு தெரிந்த மருத்துவரிடம் காண்பித்து தங்களின் சந்தேகத்தை தீர்த்து கொள்வோம் எனவும், அதுவரை எந்தவொரு நிவராண உதவியோ, அரசு வேலையோ வேண்டாம் என உறுதியாகக் கூறிவிட்டனர்.
இதனால் அமைச்சர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வழக்கறிஞர், செய்தியாளர்களிடம் பேசுகையில், எதற்காக உடலை வாங்கிக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று கேள்வியெழுப்பினர்.
மேலும், எந்த நிவாரணமும் வேண்டாம் என்றும், தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















