Govt Schools Admission: அரசுப் பள்ளிகளில் குறையும் மாணவர் சேர்க்கை; அதிகரிக்கச் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்த கல்வித்துறை!
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசு, அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2025-26 - ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இணை இயக்குநர் கூறி உள்ளதாவது:
2025- 26ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தினந்தோறும் பெறப்படும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளது என தெரிய வருகிறது. நடப்பாண்டில் 5 இலட்சம் மாணவர்களை இலக்காக கொண்டு மாணவர் சேர்க்கை பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
உடனடி சேர்க்கை!
எனவே, அனைத்து அரசு / அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி மற்றும் அருகாமை குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 5 வயது நிரம்பிய மற்றும் பள்ளி வயதுப் பிள்ளைகளை அரசின் நலத்திட்டங்களை எடுத்து கூறி உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்க்கை செய்வதற்கு (Spot admission) மேற்கொள்ளவேண்டும்.
இப்பணியை பள்ளி வேலை நேரத்தில் மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் அறிவுறுத்த அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துக
மேலும், இந்த முக்கியமான பணியை கருத்தில் கொண்டு, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி அதனை உடனுக்குடன் இவ்வியக்கத்தில் மூலம் அனுப்பப்பட்டுள்ள Google Form-ல் தினந்தோறும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தொடக்கக் கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.






















