ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஐபிஎல் முதல் வகுப்பறை வரை: 15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றிப் பயணத்தை ஆய்வு செய்யும் ஐஐஎம் இந்தூர்!

வைபவ் சூர்யவன்ஷியின் அசுர வளர்ச்சியையும், கடின உழைப்பையும், அதன் பின்னணியில் உள்ள வெற்றி உத்திகளையும் ‘வைபவ் மாடல்’ என்ற பெயரில் தங்களது மாணவர்களுக்கு ஒரு பாடமாக ஆய்வு செய்ய ஐஐஎம் இந்தூர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட் உலகம் மட்டுமல்லாமல், தற்போது கல்வித் துறையிலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறார் பிஹாரைச் சேர்ந்த 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி.
சாதனை பல படைத்த வைபவ்
ஐபிஎல் மெகா ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் இளம் வீரர்… இல்லையில்லை சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை வைபவ் படைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸை அரையிறுதி வரை அழைத்து வந்ததில் வைபவின் பங்கு முக்கியமானது.
வைபவின் அசுர வளர்ச்சியையும், கடின உழைப்பையும், அதன் பின்னணியில் உள்ள வெற்றி உத்திகளையும் ‘வைபவ் மாடல்’ என்ற பெயரில் தங்களது மாணவர்களுக்கு ஒரு பாடமாகவே ஆய்வு செய்ய ஐஐஎம் இந்தூர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
என்ன காரணம்?
வெறும் 13 வயதில், உலகின் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு சர்வதேசத் தரத்திலான போட்டிக்கு அவர் தயாரானது சாதாரண விஷயமல்ல. இந்த வியத்தகு பயணத்தை வெறும் விளையாட்டுச் செய்தியாக மட்டும் சுருக்கிவிடாமல், மேலாண்மை, தலைமைத்துவம் மற்றும் மனிதவள மேம்பாட்டுக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஐஐஎம் இந்தூர் கல்வி நிறுவனம் பார்க்கிறது.
ஒரு திறமையை மிகச் சிறு வயதிலேயே கண்டறிவது எப்படி, அதனை சரியான முறையில் பட்டை தீட்டி வளர்த்தெடுப்பது எப்படி, அதற்கான குடும்பத்தின் ஆதரவு மற்றும் பயிற்சியாளர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு என்ன என்பது குறித்து இந்த ‘வைபவ் மாடல்’ மூலம் விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
மிகச்சிறந்த கேஸ் ஸ்டடி
இது குறித்து ஐஐஎம் இந்தூர் இயக்குநர் ஹிமான்ஷு ராய் கூறும்போது, "இன்றைய கார்ப்பரேட் உலகில் மிகத் திறமையானவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவர்களைத் தக்கவைத்துக் கொள்வது நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் வைபவின் இந்தச் சாதனைப் பயணம், மேலாண்மை மாணவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த கேஸ் ஸ்டடியாக அமையும்.
இவ்வளவு இளம் வயதில் அவர் மைதானத்தில் கையாளும் கடுமையான மன அழுத்தம், குறிக்கோள் மீதான பிடிப்பு, அதற்காக அவரைச் சுற்றியுள்ள பெற்றோர்கள் உருவாக்கிய சாதகமான சூழல் ஆகியவற்றைத் தீவிரமாக ஆராய்வதன் மூலம், பெருநிறுவனங்களில் மனிதவள மேலாண்மையை பெரிய அளவில் மேம்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்
இந்த ஆய்வின் முடிவுகள் எதிர்கால கார்ப்பரேட் தலைவர்களுக்கும், முன்னணி நிறுவனங்களின் மனிதவள நிபுணர்களுக்கும் பல்வேறு புதிய நடைமுறை வணிக உத்திகளைக் கற்றுக்கொடுக்கும் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்






















