அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சி: தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில்
பள்ளிக் கல்வித்துறை மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் முற்றோதல் பயிற்சி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் முற்றோதல் பயிற்சி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை முற்றிலும் மனப்பாடம் செய்யும் வழக்கம் தமிழர்களிடையே பல்லாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது. சமுதாயத்தில் அறம் வளர்க்க திருக்குறளைப் போன்ற ஓர் ஒப்புயர்வற்ற நூல் இல்லை. இதை மனதில் கொண்டு தமிழக அரசு, பள்ளி மாணவர்கள் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக பரிசளித்து வருகறது.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஆண்டுதோறும் 70 மாணவர்கள் என்ற உச்ச வரம்பை முற்றிலும் நீக்கி, பரிசுத் தொகையையும் உயர்த்துவதாக அறிவித்தது. அந்த அறிவிப்பின் நீட்சியாக திருக்குறளை மனனம் செய்யும் மாணவர்களை அதிக அளவில் உருவாக்கி, அறம் சார்ந்த சமுகாயத்தை கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வலைத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம், சர்வீஸ் டூ சொசைட்டி என்ற மூன்று அமைப்புகளும் சேர்ந்து உலகத் இருக்குறள் முற்றோதல் இயக்கத்தைத் தொடங்கியது.
"உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்" என்ற தன்னார்வ அமைப்பு மூலம் திருக்குறளை உலகெங்கும் உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப உதவியுடன் எளிமையாக கொண்டுசெல்லவும், 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்து ஒப்பிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் ரூபாய் 10,000 மற்றும் அரசின் சான்றிதழை பெறுவதற்கு ஏதுவாகவும், ஆர்வமுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியளிக்க திருக்குறள் முற்றோதல் மற்றும் திருக்குறள் கவனகம் சார்ந்த பயிற்சியில் அனுபவம் உள்ள, திருக்குறள் முற்றோதல் முடித்த பயிற்தியாளர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இம்முயற்சியில் "உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம்" என்ற அமைப்பு தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துற்கும் 2000 திருக்குறள் நூல்கள் வீதம் சென்னையையும் சேர்த்து ஆண்டுக்கு 80,000 திருக்குறள் நூல்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விலையில்லாமல் வழங்க முன்வந்துள்ளது. திருக்குறள் முனுசாமியார் உரையுடன் கூடிய இந்நூலை உலகத் தமிழ் வளர்ச்சி மன்ற வழிகாட்டுதலுடன் வானதி பதிப்பகம் அச்சிட்டு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்திடம் வழங்குகிறது. முற்றோதல் முடித்த மாணவர்கள் திருக்குறள் பொருள் உணர்ந்து வாழ்வில் கடைபிடிக்க வழிவகை செய்தலும் இத்திட்டத்தில் அடங்கும்.
இதையடுத்து, திருக்குறள் நூல்களை இவ்வாண்டு, முதல் மாவட்டமாக சென்னைக்கு வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். முடிவில் சர்வீஸ் டூ சொசைட்டி அமைப்பின் நிறுவனர் ரவி சொக்கலிங்கம் நன்றியுரை ஆற்றினார்.
கூடுதல் விவரங்களுக்கு: https://thirukkural.valaitamil.com
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets