Trump's Plan Iran Condition: ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
US Iran War: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 15 அம்ச திட்டத்திற்கு, ஈரான் பதில் நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அந்த திட்டத்தில் என்னதான் இருக்கிறது.? பார்க்கலாம்.

மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க இஸ்ரேல் - ஈரான் போரை முடிக்க, 15 அம்ச திட்டத்தை ட்ரம்ப் முன்மொழிந்த நிலையில், மத்தியஸ்தம் செய்ய வந்த பாகிஸ்தான் மூலமாக அது ஈரானிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பதிலுக்கு ஈரான் பல நிபந்தனைகளை விதித்துள்ளது. அதை ஏற்று ட்ரம்ப் போரை முடிப்பாரா.? இந்த திட்டம் நிறைவேறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் திட்டத்தில் உள்ளது என்ன.? அதற்கு ஈரான் போட்ட பதில் நிபந்தனைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
ட்ரம்ப்பின் 15 அம்ச திட்டத்தில் உள்ளது என்ன.?
ஈரான் போரை முடிப்பதற்காக ட்ரம்ப் முன்மொழிந்துள்ள 15 அம்ச திட்டத்தில்,
- ஈரான் தனது தற்போதைய அணுசக்தி திட்டங்களை முழுமையாக கைவிட வேண்டும். அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஒருபோதும் ஈடுபடாது என உறுதி அளிக்க வேண்டும்.
- ஈரான் தனது 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட 450 கிலோ யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஒப்படைக்க வேண்டும்.
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் முன்பு குறிவைக்கப்பட்ட நடன்ஸ், இஸ்பஹான், போர்டோ அணுசக்தி நிலையங்களை ஈரான் அகற்ற வேண்டும்.
- அணுசக்தி முகமைக்கு, ஈரானில் முழுமையான அணுகல், வெளிப்படைத் தன்மை, மேற்பார்வையை வழங்க வேண்டும்.
- ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச சுதந்திர வர்த்தக கடல் பாதையாக திறக்கப்பட வேண்டும்.
- தனது பிராந்தியத்தில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்.
- ஈரானின் ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். அதற்கான வரம்புகள் பின்னர் தீர்மானிக்கப்படும்.
- எதிர்காலத்தில் தற்காப்பு நோக்கங்களுக்காக மட்டுமே ஏவுகணைகளை பயன்படுத்த வேண்டும்.
ஈரான் இந்த நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், அதன் மீதான சர்வதேச பொருளாதாரத் தடைகள் அனைத்தும் முழுவதும் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வது உள்ளிட்ட சிவில் அணுசக்தி திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்றும் ட்ரம்ப்பின் 15 அம்ச திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஈரான் விதித்த பதில் நிபந்தனைகள்
ட்ரம்ப் முன்மொழிந்த இந்த திட்டம் ஈரானிடம் வழங்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக அந்நாடும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி,
- வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் அனைத்தையும் மூட வேண்டும்.‘
- ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
- ஈரானின் ஏவுகணை திட்டத்தை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
- எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயைப் போல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் கப்பல்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க ஈரானுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
- ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கைகள் இருக்காது என்பதற்கான உத்தரவாதங்களை வழங்க வேண்டும்.
- ஈரானுடன் இணைந்த லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்புல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
- ஈரான் மீதான அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.
ஈரானின் நிபந்தனைகளை ஏற்பாரா ட்ரம்ப்.?
இந்த அமைதித் திட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், களத்தில் இன்றும் தாக்குதல்கள் நடைபெற்றே வருகின்றன. ஈரான் மற்றும் இஸ்ரேல் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறன்றன.
இந்த சூழலில், ஈரான் விதித்துள்ள நிபந்தனைகளை ட்ரம்ப் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, அமெரிக்க துருப்புக்களை மத்திய கிழக்கில் இறக்குவதற்காக நேரத்தை வாங்கவே ட்ரம்ப் பேச்சுவார்த்தை நாடகத்தை ஆடுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
அதற்கு ஏற்றார் போல், அமெரிக்கா தனது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த 3,000 வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், இது ஈரான் கூறுவதுபோல் கண்துடைப்பு அமைதித் திட்டமா அல்லது உண்மையாகவே தீர்வு எட்டப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...























