MK STALIN udhaya suriyan symbol : 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
DMK alliance seat allocation : தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்பிட முயற்சி செய்கிறார்கள். திசைதிருப்ப நினைக்கும் வதந்திகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொகுதி பங்கீட்டை முடித்த திமுக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வகையில், கூட்டணி உருவாக்கியுள்ளது. இதனையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 175 சட்டமன்ற தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னம் போட்டியிடவுள்ளது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள மடலில், 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடும், கழகத்தின் சார்பில் விருப்பமனு அளித்தவர்களுடனான நேர்காணலையும் நிறைவு செய்துவிட்டு, அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நமது கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால், உரிய அளவில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருப்பதை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் தோழமைக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களுடனும் ஆலோசித்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.
கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களிடமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்களிடமும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களிடமும் மற்ற இயக்கத் தலைவர்களிடமும் தொகுதிப் பங்கீட்டு நிலவரங்களை உங்களில் ஒருவனான நான் நேரில் விளக்கினேன். அவர்கள் எதிர்பார்க்கின்ற எண்ணிக்கையில் உள்ள நியாயத்தை மதித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கேற்ப எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டிய சூழல் இருப்பதையும் அவர்களிடம் விளக்கமாகச் சொன்னேன்.
எப்போதும் என் மீது அன்பும், திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்ற உறுதியும் கொண்ட நமது தோழமை இயக்கத் தலைவர்களும், தங்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து, உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு, பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்தான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தோழமைக் கட்சிகளை நம்முடைய அங்கமாகத்தான் பார்க்கிறேன். அவர்களுக்கான தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய அவர்களின் சகோதரனாக என் உத்தரவாதத்தையும் வழங்கியிருக்கிறேன்.
கமலின் முடிவு- மனதார வரவேற்கிறேன்
கழகக் கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நண்பர் கமல்ஹாசன் எம்.பி., அவர்கள் தனது மனம் திறந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை மனதார வரவேற்கிறேன். அதுபோலவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் மனப்பூர்வமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், 2019 முதல் தொடர்ந்திடும் நமது கூட்டணியின் வலிமைக்குச் சான்றாகும்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோளோடு தோள் நிற்பவை நம் தோழமை இயக்கங்கள். மதச்சார்பின்மை - மாநில உரிமை – சமூகநீதி - சமத்துவம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணிதான் நம்முடையது. அதில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட வழி ஏற்படாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்பிட முயற்சி செய்கிறார்கள். திசைதிருப்ப நினைக்கும் வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திமுகவினரோடு நேர்காணல்
கழகத்தின் நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவின் வெளிப்பாடு. அதுவும் இந்த முறை 16 ஆயிரத்து 500 உடன்பிறப்புகள் கலந்துகொண்ட கொள்கை உறவுத் திருவிழா. மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணிநேரத்திற்குக் குறையாமல் நேர்காணல் நடைபெற்றது. விருப்பமனு அளித்த உடன்பிறப்புகளின் முகம் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்தினால் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்ற முடிந்தது.
அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் கழகத் தலைமை நிர்வாகிகள் முன் தங்களுக்கான நேர்காணல் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்ததில் விருப்பமனு செய்திருந்த ஒவ்வொரு தொகுதி உடன்பிறப்புகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம், “உங்கள் தொகுதியில் தலைமை யாருக்கு சீட் கொடுத்தாலும் நீங்கள் இதே மகிழ்ச்சியுடன் களத்தில் பணியாற்ற வேண்டும்” என்று கழகத் தலைவர் என்ற முறையில் தெரிவித்தேன். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் தி.மு.க.வின் தொகுதிகள்தான் என்பதால், 234 தொகுதிகளிலும், இந்த மு.க.ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னபோது, உடன்பிறப்புகள் அனைவரும், வெற்றி ஒன்றுதான் எங்கள் இலக்கு என்ற உறுதியை அளித்தனர்.
175 இடங்களில் உதயசூரியன் போட்டி
உடன்பிறப்புகள் தந்த உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களிடமும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைத்திட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு நிறைவில், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் தொகுதிகள் போக, தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.
மதவாத அரசியலையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் துரோகத்தையும் எதிர்த்து நின்று, எல்லார்க்கும் எல்லாம் என்கிற ஆட்சி தொடர்ந்திடவும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான வெற்றிக் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















