கோவை வேளாண் பல்கலையில் தேசிய அறிவியல் விழா... திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் அசத்தல்...
கோவை வேளாண் பல்கலையில் தேசிய அறிவியல் தின விழாவை முன்னிட்டு 16 பள்ளிகளை சேர்ந்த 390 மாணவர்கள்,பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

தேசிய அறிவியல் தின விழாவை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலைகழத்தில் தாவர மூலக்கூறு மற்றும் உயிரித் தொழில் நுட்ப மையம், அதன் மகத்துவ மையம் (COXBIT) இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தேசிய அறிவியல் தினப் போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது.
கோவையை சுற்றியுள்ள 16 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 390 க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பல்கலைகழத்திற்கு வந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களிடம் புதைந்திருக்கும் பகுப்பாய்வு சிந்தனை மற்றும் புதுமை வேட்கையை தட்டியெழுப்புவதே இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் என நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.
போட்டியில் அசத்திய மாணவர்கள்
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் அறிவியல் கருத்துக்களையும், கட்டுரைப் போட்டியில் சமகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தங்களது எழுத்தாற்றலையும் வெளிப்படுத்தினர். குறிப்பாக, 'Myth VS Fact' என்ற போட்டி மாணவர்கள் இடையே இருந்த கட்டுக் கதைகளை உடைத்து, அறிவியல் உண்மைகளை வெளிப்படையாக புரிய வைத்தது. இதுமட்டுமின்றி, Rank Only Memory' என்ற நினைவாற்றல் போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகளில் மாணவர்கள் காட்டிய வேகம் அங்கு இருந்தவர்களை வியக்க வைத்தது.
கலை மற்றும் அறிவியலை இணைக்கும் வகையில் அமைந்த கேன்வாஸ் பெயிண்டிங் மற்றும் மலர் அலங்காரப் போட்டிகள் மாணவர்களின் படைப்பாற்றலுக்கு ஒரு நல்ல தளமாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்த அறிவியல் சங்கமம் வெறும் போட்டியாக மட்டும் இன்றி, வருங்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் ஒரு மெகா ஈவென்ட் ஆக அமைந்ததாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் உயிரி தொழில்நுட்ப மையத்தில் உள்ள அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் தொழில்முனைவோர் பிரிவுகளை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் கண்டு வியந்தனர். இந்தத் தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் "பயோகான்கரென்சா'26" (BioConcorrenza'26) என்ற பிரம்மாண்டக் கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற உள்ளதாக தாவர மூலக்கூறு மைய இயக்குநர் முனைவர் ந.செந்தில் தெரிவித்தார். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதோடு, கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. மூன்றாமாண்டு பயோ-டெக்னாலஜி மாணவர்கள் ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி, இன்றைய தலைமுறைக்கு அறிவியல் மீதான காதலை வளர்ப்பதோடு, ஆராய்ச்சித் துறையில் புதிய மைல்கல்லை எட்ட உதவும் என நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்தனர்.























