3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
CBSE Three Language Policy: சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய மாற்றம்: 2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் 3-வது மொழி கட்டாயம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், தேசிய கல்விக் கொள்கையின்படி பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஒரு மிக முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழி கற்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. எனினும் இந்த நடைமுறை ஒரு வார காலத்துக்குள் அமலாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய பாடத்திட்டம்
புதிய பாடத்திட்ட விதிகளின்படி, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்கள் இனி கட்டாயம் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் கட்டாயம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மொழிகளாக (Native Indian Languages - தமிழ், இந்தி, மலையாளம், சமஸ்கிருதம் போன்றவை) இருக்க வேண்டும்.
2026- 27ஆம் ஆண்டு 6ஆம் வகுப்புக்குத் தொடங்கும் மும்மொழிக் கொள்கை, ஒவ்வொரு ஆண்டாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும். இவ்வாறாக 2030- 31ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கை விரிவு செய்யப்படும்.
வெளிநாட்டு மொழிகளுக்கும் வாய்ப்பு
மாணவர்கள் விரும்பினால் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை ஒரு பாடமாகத் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், அவை இரண்டு இந்திய மொழிகளுக்குப் பதிலாக அமையக் கூடாது. சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு மாணவர் ஆங்கிலம் படித்தால், மீதமுள்ள இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.

கற்பித்தல் முறையில் பெரிய மாற்றம்
தற்போது பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பிரதானமாக கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய உத்தரவு பள்ளிகளின் கற்பித்தல் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதற்கான புதிய பாடப்புத்தகங்கள் தயாரிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்த அறிவிப்பு சிபிஎஸ்இ தரப்பில் இன்னும் வெளியாகவில்லை. எனினும் ஒரு வார காலத்துக்குள் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
3ஆம் மொழியை உடனடியாக கற்பிப்பது எப்படி?
பாடப்புத்தகமோ, ஆசிரியர்களோ இல்லாமல் மூன்றாம் மொழியை உடனடியாகக் கற்பிப்பது எப்படி என்று மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























