2026-ல் கபீர் புரஸ்கார் விருது: ஆட்சியர் அழைப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த விருது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள், பிற வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியதற்காக வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் 2026ஆம் ஆண்டிற்கான "கபீர் புரஸ்கார் விருது" பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காக 2026ஆம் ஆண்டிற்கான "கபீர் புரஸ்கார் விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப் படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இந்த விருதினை பெறத் தகுதி உடையவராவர்.
எதற்காக இந்த விருது?
மேலும், இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மன வலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
2026ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை அளிக்கலாம். இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட இணையதள முகவரியான http://awards.tn.gov.in-ல் மட்டுமே 15.12.2025 அன்று அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர். இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் 26.01.2026 குடியரசு தினத்தன்று விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.
சென்னை ஆட்சியர் அழைப்பு
எனவே, சென்னை மாவட்டத்தைச் சார்ந்த "கபீர் புரஸ்கார் விருது" பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.






















