Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் 12ம் வகுப்பு மாணவி அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது விளாத்திகுளம். இந்த மாவட்டத்தில் உள்ள குளத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தனர். கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் இந்த மாணவி நேற்று மாலை இயற்கை உபாதைக்காக கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
கொல்லப்பட்ட 12ம் வகுப்பு மாணவி:
அங்கு சென்ற மாணவி அதன்பின்பு நீண்ட நேரமாகியும் காணவில்லை. இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியை நீண்ட நேரம் தேடியும் காணததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் நீண்ட நேரமாக தேடப்பட்ட நிலையில், வேடநத்தம் கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருப்பதை காவல்துறையினர் இன்று கண்டுபிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்டது காணாமல் போன மாணவியின் சடலம் என்பது தெரியவந்தது.
பாலியல் வன்கொடுமை:
மேலும், கொல்லப்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டே கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது. மாயமான 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தூத்துக்குடியையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இதனால், கொல்லப்பட்ட மாணவியின் உறவினர்களும், குடும்பத்தினரும் கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.
கொலை செய்தது யார்?
மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் மாணவி கொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன? கொலை செய்தது யார்? என்பதை விரைந்து கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சடலம் கண்டுபிடிக்கப்பட்ட காட்டுப்பகுதியிலும், மாணவியின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனத்தை காவல்துறையினர் செலுத்தி வருகின்றனர். மாணவி கொலை செய்யப்பட்டு துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதால் இது ஏற்கனவே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.























