உச்சகட்ட போதை; சின்ன மாமனார் தலையில் உரலைப் போட்டுக் கொன்ற மருமகன் கைது!
மயிலாடுதுறை அருகே கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை தனது வீட்டுக்கு அனுப்பாத கோபத்தில் சாராய போதையில் சின்ன மாமனார் தலையில் கல் உரலை போட்டு கொன்ற மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறையை அடுத்து திருவிழந்தூர் ஊராட்சி, பர்மா காலனி கார்த்தி நகரை சேர்ந்தவர் 30 வயதான பிரபாகர். இவரது மனைவி 27 வயதான மாலதி. இவர்களுக்கு கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பிரபாகர் எந்த வேலைக்கும் செல்லாமல், குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்ததால், மாலதி கோபித்துக்கொண்டு திருவிழந்தூர் அப்பங்குளம் தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் மாலதி சமாதானம் செய்ய வந்த பிரபாகர், அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் குடித்துவிட்டு வந்து, மாலதியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பிரபாகர். ஆனால், மாலதி செல்ல மறுத்ததைத் தொடர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை, அப்பங்குளம் பகுதியில் வசிக்கும் மாலதியின் சித்தப்பாவும் விவசாய கூலித் தொழிலாளியுமான 70 வயதான பாக்கியம் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.

இதையடுத்து, ’உன்னால்தான் எல்லா பிரச்னையும், உன்னை என்ன செய்கிறேன் பார்!’ என்று சொல்லிவிட்டு பிரபாகர் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை வீட்டு வாசலில் பாக்கியம் தலையில் உரல் கல் போடப்பட்ட நிலையில், ரத்தம் சொட்டச் சொட்ட இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளிக்க, காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்று உயிரிழந்த பாக்கியத்தின் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாக்கியத்தை கொன்றது அவரது மருமகன் பிரபாகர்தான் என்பது உறுதியானதைத் தொடர்ந்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அப்பங்குளம் பகுதியில் உள்ள ஐயனார் கோயில் பகுதியில் தவமணி என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக பாண்டி சாராயம் விற்பனை நடந்து வருவதாகவும், பலமுறை காவல்துறையினரிடம் புகார் அளித்தும் தடுத்து நிறுத்தப்படவில்லை. சாராய விற்பனையை தடுத்திருந்தால், இந்த சண்டை கொலையில் முடிந்திருக்காது என குற்றஞ்சாட்டிய அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் அங்கு சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 சாராய மூட்டைகளை கைப்பற்றி எடுத்துவந்து, இறந்தவரின் வீட்டின் அருகே உள்ள திடலில் போட்டனர். அதனைக் கைப்பற்றிய போலீசார் உடனடியாக அதனை தீவைத்து கொளுத்தி அழித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய விற்பனை முழுவதுமாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக போலீசார் கூறிவரும் நிலையில், பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்திவந்து விற்பனை செய்யப்படுவது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில், வெளிமாநில சாராய பாக்கெட்டுகளை கிராம பெண்களே கைப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாராய விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Asian Games 2023: ‘இதுக்கு மேல அடிக்க முடியாதுடா’ .. மங்கோலியாவை பொளந்து ரன் மழை பொழிந்த நேபாளம்..!
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்























