China Backs Iran: “ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
US Iran War: மத்திய கிழக்கில் அமெரிக்க இஸ்ரேல் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவாக சீனா என்ட்ரி கொடுத்துள்ளது. அடுத்து என்ன.?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானை தாக்கி வரும் நிலையில், ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, பெரிய ட்விஸ்ட்டாக வளைகுடா நாடுகள் மீது கடுமையான தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது. இந்த போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக சீனா இந்த விவகாரத்திற்குள் வந்துள்ளது. அதோடு, அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் ஒரு மெசேஜை சொல்லி இருக்கிறது சீனா. அது என்ன.? பார்க்கலாம்.
“ஈரானுக்கு உறுதுணையாக இருப்போம்“
மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போரில், ஈரானுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, சீனா மற்றும் ஈரான் இடையேயான பாரம்பரிய நட்புறவை சீனா பெரிதும் மதிப்பதாக தெரிவித்துள்ளர்.
மேலும், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியத்தை பாதுகாப்பதில், ஈரானிற்கு சீனா ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதோடு, ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதில் சீனா உறுதுணையாக இருக்கும் என்றும் வாங் யி கூறியுள்ளார்.
“அமெரிக்காவும், இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்“
தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாக தங்களது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் வாங் யி வலியுறுத்தியுள்ளார். மேலும், பதற்றங்கள் இன்னும் அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், இந்த போர் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதோடு, ஈரானுக்கு சீனா ஏவுகணைகளை வழங்க உள்ளதாக வெளியான தகவல்களை வாங் யி மறுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய நிலையில், ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இந்த சூழலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த ஈரான், கமேனி கொலைக்கு பழிவாங்குவோம் என சூளுரைத்தது.
அதைத் தொடர்ந்து, தனது தாக்குதல்களை தீவிரப்படுத்திய ஈரான், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் கடுமையாக தாக்கத் தொடங்கியது. இதையடுத்து, அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து வளைகுடா நாடுகளும் பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போரில் அவர்களும் இணையும் பட்சத்தில், இது மிகப் பெரிய ஒரு போராக மாற வாய்ப்புள்ளது. ஏற்கனவே சீனா ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஒருவேளை அவர்களும் ஈரானுக்கு ராணுவ ரீதியாக உதவ ஆரம்பித்தால், நிச்சயம் இது ஒரு பிராந்திய போராக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
வரும் நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.























