அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை
குஜராத்தில் செய்யாத குற்றத்திற்காக 30 வருட ஜெயில் தண்டனையை அனுபவித்தார், விடுதலையான மறுநாளே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் 20 ரூபாய் வழக்கில் செய்யாத குற்றத்திற்காக ஒருவர் 30 வருடம் ஜெயிலில் இருந்தது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
30 வருட ஜெயில் தண்டனைக்குப் பிறகு மரணம்
ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் திரைப்படத்தின் உண்மை சம்பவமாக குஜராத்தில் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆனால், அந்த நபர் இன்னும் சிறிது காலம் மகிழ்ச்சியுடன் இருந்து இருந்தால், அவருக்கு இது ஒரு நல்ல முடிவாக இருந்து இருக்கும். குஜராத்தில் ஒருவர் ரூ.20 லஞ்சம் வாங்கியதற்காக 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு நிரபராதி என அறிவிக்கப்பட்டார். கடந்த 4ம் தேதி குஜராத் நீதிமன்றம் அவரை நிரபராதி என அறிவித்தபோது, ”என் வாழ்க்கையில் என் மீதிருந்த களங்கம் நீக்கப்பட்டுவிட்டது. கடவுள் என்னை இப்போது அழைத்துச் சென்றாலும், எனக்கு எந்த துக்கமும் இருக்காது," என்று அவர் மகிழ்ச்சிபட பேசியது குறிப்பிடத்தக்கது.
வழக்கில் குற்றச்சாட்டு என்ன?
காவல்துறையில் காவலராய் பணியாற்றி வந்த பாபுபாய் பிரஜாபதி அகமதாபாத்தில் பணியமர்த்தப்பட்டபோது, அவர் ரூ.20 லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 1997 ஆம் ஆண்டு அமர்வு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டுகள் 2002 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டன. சாட்சி விசாரணைகள் 2003 இல் தொடங்கின, 2004 ஆம் ஆண்டு, அமர்வு நீதிமன்றம் பிரஜாபதிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்தது.
விடுதலையான மறுநாளே மரணம்
குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிரஜாபதி அமர்வு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி அவர் நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை, அவரது மேல்முறையீடு 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது - சாட்சிகளின் வாக்குமூலங்களில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாகவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் கூறியது. பிரஜாபதியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிதின் காந்தி, முழு வழக்கும் சந்தேகத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
தீர்ப்புக்குப் பிறகு, பிரஜாபதி தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மகிழ்ச்சியில் திளைத்து, இப்போதே மரணித்தாலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான் என பேசியுள்ளார். எதிர்பாராத விதமாக, விடுதலையாகி வீடு திரும்பிய மறுநாளே அந்த வார்த்தைகள் பலித்து, மறுநாளே பிரஜாபதி உயிரிழந்துள்ளார்.
பொய்யால் வாழ்க்கையை இழந்த காவலர்
செய்யாத குற்றத்திற்காக சிறையிலெயே தனது வாழ்வின் பெரும் பகுதியை இழந்தவர், இனியாவது சிறிது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று அவரது நலம் விரும்பிகள் வேதனை தெரிவித்தனர். இந்திய குற்றவியல் சட்டம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு பிரஜாபதி வழக்கு உதாரணம் எனவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த மரணம் தொடர்பாக பேசிய அவரது வழக்கறிஞர், "நான் அவரிடம் ஐயா, நீங்கள் அரசாங்கத்திலிருந்து பெற வேண்டிய அனைத்து சலுகைகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்” என்று சொன்னேன். மறுநாள் அவரை மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது," என்று வழக்கறிஞர் வேதனை தெரிவித்தார்.
























