இணையத்தை அதிர வைத்த வீடியோ… சாலையோரத்தில் கஞ்சா செடி
சூலூர் அருகே சாலையோரத்தில் கஞ்சா செடி கண்டுபிடிப்பு: திட்டமிட்டு வளர்த்ததா? காவல்துறை விசாரணை

சூலூர் அருகே சாலையோர நடைபாதையின் கீழ் பகுதியில் கஞ்சா செடி ஒன்று வளர்ந்திருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எல்.என்.டி பைபாஸ் சாலை பகுதியில், பிரபல தனியார் மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் இந்தச் செடி வளர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர், பிற செடிகளுக்கு இடையே சந்தேகப்படும்படி காணப்பட்ட ஒரு செடியை கவனித்து பார்த்தபோது, அது கஞ்சா செடி என அடையாளம் கண்டுள்ளனர்.
இணையத்தை அதிர வைத்த வீடியோ
இதனைத் தொடர்ந்து, சில இளைஞர்கள் அந்தச் செடியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மருத்துவமனை வளாகம் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா செடி வளர்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, அந்தச் செடி தானாகவே வளர்ந்ததா அல்லது சமூக விரோதிகள் யாரேனும் திட்டமிட்டு வளர்த்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக செடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.























