விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட் வீசிவிட்டுத் தப்பியோடிய கணவரை நகரக் காவல் நிலையப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு இன்று கைது செய்தனர்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட் வீசிவிட்டுத் தப்பியோடிய கணவரை நகரக் காவல் நிலையப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு இன்று கைது செய்தனர். இச்சம்பவத்தில் அருகில் நடந்து சென்ற முதியவர் ஒருவரும் காயமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு மற்றும் விவாகரத்து:
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி அன்புராணி. இந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவிி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் நீதிமன்றத்தை நாடி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு முறைப்படி விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்திற்குப் பிறகு, அன்புராணி தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இருப்பினும், ராமச்சந்திரன் அடிக்கடி அன்புராணியின் வீட்டிற்குச் சென்று "குழந்தைகளைப் பார்க்க வேண்டும்" எனச் சண்டையிட்டு வந்ததோடு, செல்போனில் தொடர்புகொண்டும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
நடுரோட்டில் நடந்த கொடூரம்:
இந்நிலையில், நேற்று அன்புராணி விழுப்புரம் நகரப் பகுதியான திரு.வி.க வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த ராமச்சந்திரன், தான் கையோடு எடுத்து வந்த கழிப்பறை சுத்திகரிப்புக்கு பயன்படுத்தும் ஆசிட்டைத் (Toilet Acid) திடீரென அன்புராணியின் முகத்தில் வீசியுள்ளார்.
ஆசிட் வீச்சில் அன்புராணி அலறித் துடித்த நிலையில், அருகில் நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவர் மீதும் எதிர்பாராதவிதமாக ஆசிட் சிதறி விழுந்தது. தாக்குதலை நடத்திய உடனடியாக ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதி:
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த விழுப்புரம் நகரக் காவல் நிலையப் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆசிட் வீச்சால் காயமடைந்த அன்புராணி மற்றும் முதியவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் மீட்டு, அருகில் உள்ள நகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன் பின்னர், முகத்தில் பலத்த காயமடைந்த அன்புராணி மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணவர் கைது:
இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்த நகரக் காவல் துறையினர், தப்பியோடிய ராமச்சந்திரனைப் பிடிக்க தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராமச்சந்திரனைப் போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
ட்ரெண்டிங் செய்திகள்





















