கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
ஊத்தங்கரை அருகே உள்ள தோட்டத்து வீடு ஒன்றில் 70 வயதான முதியவரும், அவரின் 60 வயது மனைவியும் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு இந்த வீட்டுக்குள் மர்ம கும்பல் ஒன்று புகுந்து முதியவரை தாக்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 60 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள தோட்டத்து வீடு ஒன்றில் 70 வயதான முதியவரும், அவரின் 60 வயது மனைவியும் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு இந்த வீட்டுக்குள் மர்ம கும்பல் ஒன்று புகுந்து முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதேசமயம் அங்கிருந்த அவரின் 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நள்ளிரவில் சுற்றிலும் ஆள் அரவமற்ற தோட்டத்து வீட்டில் இந்த சம்பவம் நடந்ததால் தம்பதியினர் கூக்குரலிட்டும் யாரும் வரவில்லை.
இந்த நிலையில் இன்று காலையில் அந்த பக்கமாக வந்த பொதுமக்கள் முதியவர் இரத்த காயங்களுடனும், மனைவி நிலைகுலைந்தும் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கும், ஆம்புலன்ஸூக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸில் ஊத்தரங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முதியவர் உயிரிழந்து விட்டார். மூதாட்டிக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக பெண்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் தண்டனைகள் கடுமையாக இருந்தாலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. நாமக்கலில் வீட்டி வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் 60 வயது மூதாட்டியும் வன்புணர்வுக்கு ஆளானது பெண்கள் பாதுகாப்பு மீதான கேள்விகளை உண்டாக்கியுள்ளது. விரைந்து மாநில அரசு இதுபோன்ற குற்றங்களை அடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவம்
மத்தியப்பிரதேச மாநிலத்திலும் 90 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த மூதாட்டி தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். அப்போது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று உள்ளே வந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தனது மகளை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் காவல்துறையில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.























