காணாமல் போன நகை.. சிசிடிவி கேமிராவால் சிக்கிய பெண்
நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 22 கிராம் தங்க கம்மலை திருடிச் சென்ற பெண் கைது. 22 கிராம் தங்க கம்மல் மீட்பு.

காணாமல் போன நகை
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணி ரசாக் கார்டன் பகுதியில் நாகராஜன் ( வயது 49 ) தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 23.04.2025 அன்று இரவு கடையிலிருந்தபோது , கடைக்கு வந்த ஒரு பெண் மணி தாலியில் கோர்க்கும் உருப்படிகளை வாங்கி , அதற்கு அரக்கு போட வேண்டும் எனக் கூறி காத்திருந்து, சிறிது நேரத்தில் அரக்கு போட வேண்டாம் எனக் கூறி அவர் வாங்கிய தங்க உருப்படிகளுக்கான பணத்தை கொடுத்து, உருப்படிகளை வாங்கி சென்றுள்ளார்.
சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் தங்க நகைகளை சரி பார்த்தபோது , 22 கிராம் எடை கொண்ட ஒரு ஜோடி தங்க கம்மல் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து நாகராஜன் K-3 அமைந்தகரை காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி கேமிராவில் சிக்கிய பெண்
К-3 அமைந்தகரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடையிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது , தங்க கம்மல் ஜோடியை திருடிச் சென்றது சென்னை பொழிச்சலூர் நேரு நகர் வனஜா 2 வது தெருவை சேர்ந்த தாட்சாயினி ( வயது 52 ) என்பது தெரிய வந்தது.
பின்பு அவரை கைது செய்து, அவரிடமிருந்து கடையில் திருடிய 22 கிராம் எடை கொண்ட ஒரு ஜோடி தங்க கம்மல் மீட்கப்பட்டது. விசாரணையில் தாட்சாயினி மீது ஏற்கனவே சைதாப்பேட்டை, யானைகவுனி , ஜெ.ஜெ. நகர் , ஆயிரம் விளக்கு , சௌந்தரபாண்டியனார் அங்காடி மற்றும் நசரத்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் 7 திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட தாட்சாயினி விசாரணைக்குப் பின்னர் , நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆட்டோவில் வந்து , கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற 2 நபர்கள்
சென்னை மேற்கு மாம்பலம் படவேட்டம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் செல்வமணி ( வயது 26 ) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் , இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் , செல்வமணி 26.04.2025 அன்று இரவு மருத்துவமனையில் தாயாரை பார்த்து விட்டு, மறுநாள் (27.04.2025) அதிகாலை, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில், மேற்கு மாம்பலம், ரெட்டி குப்பம் சாலையில் செல்லும் போது, ஆட்டோவில் வந்த 2 நபர்கள் செல்வமணியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி , அவர் வைத்திருந்த பணம் ரூ.3,000/-ஐ பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து செல்வமணி R-6 குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். R-6 குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட செனாய் நகர் பகுதியை சேர்ந்த அனுஷ் ( வயது 24 ) , கணேஷ் ( வயது 37 ) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.1,000/-மீட்கப்பட்டது.
விசாரணையில் அனுஷ் மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகளும், கணேஷ் மீது 14 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 2 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.





















