PF Withdrawal: இனி பிஎஃப் பணம் எடுக்கறது ஈஸி- ஏடிஎம், யுபிஐ வசதிகள் விரைவில் அறிமுகம்
PF Withdrawal in ATM: ஊழியர்கள் தங்கள் யுஏஎன்-ஐ (UAN) ஆக்டிவேட் செய்து, ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலம் ஏடிஎம் சேவைகளைப் பெறலாம்.

பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்குதாரர்கள் ஏடிஎம்களில் இருந்து நேரடியாகப் பணம் எடுப்பதற்கு இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த முன்னெடுப்பு 8 கோடி ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் இருக்கும். இதுதொடர்பான அறிவிப்பு தீபாவளிக்கு முன்னால் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக EPFO சந்தாதாரர்களுக்கு அதிக நிதி வசதியை வழங்கும் நோக்கில் விவாதிக்கப்படும்.
ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது தவிர, EPFO 3.0-ஐ அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது பணம் எடுப்பது மட்டுமல்லாமல், தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பித்தல் மற்றும் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல் போன்ற செயல்முறைகளையும் எளிதாக்கும்.
ஏடிஎம் மூலம் பணம் பெறுவது எப்படி?
ஊழியர்கள் தங்கள் யுஏஎன்-ஐ (UAN) ஆக்டிவேட் செய்து, ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலம் ஏடிஎம் சேவைகளைப் பெறலாம். சந்தாதாரர்களுக்கு அவர்களின் பிஎஃப் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட சிறப்பு ஏடிஎம் கார்டு வழங்கப்படும். இது நேரடியாகப் பணம் எடுக்க உதவும். டிஜிட்டல் பரிமாற்றங்களை விரும்புவோர், தங்கள் பிஎஃப் கணக்குகளை யுபிஐயுடன் இணைப்பதன் மூலம் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு எளிதாக நிதியை மாற்றலாம்.

ஓய்வூதியமும் உயர்வா?
EPFO வாரியம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொழிற்சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாகும். இது ஓய்வு பெற்றவர்களின் நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக இருக்கும்.
பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்
அதேபோல வேலை இழந்த ஊழியர்கள் ஒரு மாத வேலையின்மைக்குப் பிறகு தங்கள் பிஎஃப் இருப்பில் இருந்து 75 % தொகையை எடுக்கலாம். இரண்டு மாதங்களுக்குப் பிறகும் வேலை கிடைக்கவில்லை என்றால் மீதமுள்ள 25% தொகையையும் பெறலாம். ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு, பிஎஃப் பணம் எடுப்பதில் வரி விலக்கு அளிக்கப்படும்.
ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல் மற்றும் யுபிஐ ஒருங்கிணைப்பு, EPFO 3.0 உடன் இணைந்து, வருங்கால வைப்பு நிதி அமைப்பை நவீனமயமாக்கும் என்றும், சந்தாதாரர்களுக்கு தங்கள் பணத்தைப் பெற மிகவும் வசதியான வழியை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






















